வியாழன், 28 அக்டோபர், 2010

pls dont copy it

பாம்படக் கிழவியும் காற்றில் கரைந்துபோன ஒரு மூட்டை அன்பும்


1.

எல்லாம் வேடிக்கையெனத் தோன்றுகிறதின்று
இந்தச் சுவர்களுக்குள் அடைந்துகொண்டிருக்குமென்
பெருமூச்சுக்களை
கம்பிவலையிட்ட சன்னலின் சிறுதுவாரங்களினூடு
பிதுக்கி வெளியேற்றுவதுதான் வாழ்வென்றிருந்திருந்தால்
நேசிக்காதிருந்திருப்பேன் எவரையும்
படிப்பு, எழுத்து, பேச்சு
ஆர்வம், துடிப்பு, தேடல்
இந்தப் புள்ளியில் அனைத்தும் தொலையுமென்றிருந்திருந்தால்
சிந்திக்கப் பழகாதிருந்திருப்பேன் அன்றைக்கே
காத்திருப்பை வேண்டும்
சட்டகங்களுக்குள் சிக்கிக்கொண்ட
பலிபீட வாழ்வு
இனியும் அன்பென்ன அன்பு..
கனவிலொரு கழுகு வரைந்து
அதன் கால்விரல்களிடை காதலனுப்பி
அந்தப்புரத்தில் தவளைக்கும் தேருக்குமாய்
காத்திருந்து சுகங்காணத் தெரிந்தவர்களுக்கெல்லாம்
முடிவதில்லை,
என்னைப்போல
கருணை வரண்டு மூர்க்கம் பிடித்த
பாம்படக் கிழவியாயிருக்க
இருந்துவிட்டுப் போகிறேன்
திமிர்க் கிழவியாயில்லையென்றாலும்,
அவளது சிலிர்த்தாலும் நிமிராத
ஒரு கற்றை சுருள் மசிராகவாவது..


2.

நடுங்கும் விரல்களுடன்
தடித்த சாக்கு ஊசிக்குள்
தட்டுத் தடுமாறி நூல்கோர்க்க விழையும்
ஒரு கிழவியின் தீவிர கவனத்துடன்
கடக்க வேண்டியிருக்கிறது இந்த நாட்களை
சாவை சில்லறைகளாய் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்
நாட்டிலிருந்து எந்தச் செய்திகளும் வேண்டாமென
என்னைப்போலவே நூல்பின்னிக்கொண்டிருக்கும்
இன்னொருத்தி பதற்றத்துடன் கூறுகிறாள்
வெகுதொலைவுக் கிராமமொன்றில்
பெண்ணுறுப்பைக் கீறியெடுக்க மறுக்கும்
பருவமடைந்த ஆபிரிக்கப் பெண்ணின் அலறல்
வளையங்களால் நிரப்பப்பட்ட அவள் சகோதரியின் கழுத்து
எமக்கென இல்லாமற்போன
நாகரிகமொன்றுக்கு சாட்சியமாகிறது
யன்னல்களுக்குப் பின்னால் முகங்களைப் புதைத்துக்கொண்டு
என்னால் சகோதரிகள் குறித்தும்
ஆதங்கப்பட முடிவது வேடிக்கைதான்
இன்னும் என்னைத் தேற்றிக்கொள்ளவும்..
அந்தக் கிழவி நிமிர்ந்து பார்த்து சிரித்தபடியே
செம்மறியாடுகளை ஓட்டிச் செல்கிறாள்
பசும்புல்வெளி தேடி
அவள் பொக்கை வாய்க்குள் எதிரொலிக்கும்
நீரோடை பற்றியதோர் பாடல்
எழுதுமேசை மீண்டு,
நானும் கிழவியாய்ப் பிறவாததன் விசனத்தை
ஒரு கவிதையாக்கி
கிழவியாய்ப் பிறந்து குழந்தையாய் சாகவேண்டும்
என் (கடவுளர்க்கான) விண்ணப்பங்களுடன்
நாட்குறிப்பின் பக்கமொன்றினுள்
பத்திரமாய் ஒளித்துக் கொள்கிறேன் மறுபடியும்
தலைகீழ் வாழ்வு சிறு எலுமிச்சைச் செடியென
துளிர்விடத் தொடங்கும்
என் இன்றிராக் கனவுக்குள்


உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்
இடம்:
நியாய சபை
நேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு



நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,
தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..
மௌனம் எமக்கிடையே
ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது
எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*
தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி
காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்
நான் கத்தியழ விரும்பினேன்
'நீ எனதும் அம்மாதானில்லையா?'
ஒரு பிடி நேசம்
சில கொத்து புன்னகை
சிறு துளி இடம் உன் மடியில்
வேறென்ன கேட்டேன் உன்னிடம்..
கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை
புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்
இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்
உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..
ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்
கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..
தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட
சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென
பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்
இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது


*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.

(for the country I love, and for a life that demands us much more than it deserves..)




மோகித்திருப்பதன் சாபங்களைக் கனவில் வரைதல்

நேற்று
அவனென்னைப் பிரிந்தான்
அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்
எல்லாமே...

நான் இன்னொருத்தனை மோகித்திருந்தேனாம்..

(எப்போதும் உங்களுக்கென்று ஒருத்தியை பெயர் குறித்து நிச்சயித்துக் கொள்ளுங்கள். அவள் வேறெந்த ஆடவனையும் பார்க்கக்கூடாது.. பேசக்கூடாது, தீண்டவும் கூடாது. அதைவிடவும் கேவலம், நான் ஒருத்தனைக் காதலிக்கிறேனென ஒரு பெண் உங்கள் முன்னிலையில் உரத்துச் சொல்தலாகாது. பண்பாட்டின் பாதுகாவலர்களுக்கு நடத்தை கெட்டவளாயும், முற்போக்குவாதிகளின் பார்வையில் மேலாதிக்கத்துக்கு கொடிபிடிக்கும் மற்றுமொரு சராசரியாயும், வேறெப்படியும் முத்திரை குத்தப்பட விரும்பாதவரை ஒரு பெண்ணுக்கு எதையும் உரத்துப் பேசுதல் எப்போதும் மறுக்கப்பட்டதுதான்.)

ஒரு வார்த்தை தானும் சொல்லிக்கொள்ளாமல்
பிரிந்தவனைத் தேடி
எலுமிச்சம்பழக் கிழவியொருத்தி
காட்டிய வழியில்
ஓரடியெடுத்து வைத்து பகலிரவைக் கடந்தேன்
நான் பலவீனமானவளென்பதை
அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டு
புன்னகைக்க புன்னகைக்க
பல்லெல்லாம் கொட்டுண்டு
கடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது.
வேண்டும்போதெல்லாம்
நினைக்க முன்னரே மறுபடி முளைத்த
பற்களிடமிருந்து தப்பியோடி
தொலைந்துபோன கனவுகளெங்கும்
தேசாந்திரியாய் அலைந்து திரிய
இதோ இருக்கிறான் நீ தேடிக்கொண்டிருந்தவனென
அரைக்காற்சட்டைச் சிறுவனொருவன்
கைநீட்டிக் காட்டிய திசையில்
என் கனவு வெறும் நீர்க்குமிழியென
உடைந்து மறைந்தே போயிற்று.

அதனைத் தொடர்ந்தது,
வெறுமைகளற்ற பாதாளங்களை நோக்கிய
உறவொன்றின் தற்கொலைப் பயணம்
மனங்கேளாத தங்கை
தனக்கு நீச்சல் தெரியாதென்பதையும் மறந்து
அவனைக் காப்பாற்றவென தானும் பாய்ந்து
மடிந்து போனாள், கையில்
கையடக்கத் தொலைபேசியுடன்
விளிம்பினை நெருங்கிவிட்ட என்னை
பிடித்திழுத்த கரங்களைச் சபித்தபடி,
வெட்டிப்போட வெறிகொண்டு
தெருக்களெங்கும் ஓலமிட்டுத் திரிந்தேன், சிலகாலம்.

மற்றுமொரு மழைநாளில்
ஊரைவிட்டு விலகியோடவென ரயில் நிலையமடைந்து
அம்மாவுக்குத் தொலைபேசினேன்..
அம்மா என்னை மன்னித்துவிடு
நான் போகிறேன்
என்றென்றைக்குமாக போகிறேன்
இனி உன் சமையலை யாரும் குறைசொல்லப் போவதில்லை
கலைந்த துணிகளும், சிதறிக்கிடக்கும் புத்தங்களும் வரவேற்க
பொறுப்பற்றவளென இனி யாரையும் நீ பேசவேண்டியதில்லை..
என்னை மன்னித்துவிடு.
நீயும் போகாதையடி அசட்டுப் பெண்ணே..
எதிர்முனையில் அறுந்தது அவள் குரல்,
கையில் காசில்லாமல் போனதில்.

பின்னமொரு பொழுதில்
என் விருப்பம் வேண்டி வழிதொடர்ந்தவனின்
வாசலில் பிச்சைக்காரியாய் கையேந்தியபடி
எனதிருப்பு...
நிராகரிப்பின் வலி படர்ந்த முகத்தை
புன்னகைப் பூச்சுக்குள் மறைத்துக்கொண்டு
உள்ளழைத்து உணவு தந்து
மரியாதையுடன் அவன் வழியனுப்பி வைக்க
மனம் இலேசாகி மிதந்து
கருமேகம் கவிந்திருந்த தெருவதனில் நினைவு வந்தது
அவன் வீட்டில் மறந்து விட்டிருந்த குடை

இனிமேலும்,
எவரும் எனக்காகக் காத்திருக்கப் போவதில்லை
இழுத்தணைத்து நெஞ்சில் தாங்க
மார்பில் கிடந்தழ
எவரும் என்னை அனுமதிக்கப் போவதுமில்லை.

தேவதைகள் காத்திருப்பதில்லை

தேவதைகள்
சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..
பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..


எற்றுண்டு கிடத்தல்...


மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு
சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்
தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது
ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..
மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட
வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்
முக்கால் மணிநேரத்தில் முற்றத்தில் கிடந்த
முழுவாளி நிறைத்தன
அது விளிம்புடைந்த பழம் வாளியென்பது வேறு கதை.

புறநிலைக் குறிப்பு

தனித்தனியே பொறுக்கியெடுத்து தூசு தட்டி
சேலை நெய்து அணிந்திட்ட ஒருத்தி
தேவதையாக உருக்கொண்டு - அவர்கள்
கதவுகளைத் தட்டத் தொடங்கினாள்
அகலத் திறந்த கோட்டைகளின் கதவுகள்
அல்லோலகல்லோலத்துடன் ஆடம்பரமாய் வரவேற்க
பாளம் பாளமாய் வெடித்திருந்த வறள் நிலத்தில்
முதல் துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்து ரசித்தவள்
'நீ மட்டுமா வந்தாய்' என்ற புருவமுயர்த்தல்களை
கவனிக்கத் தவறியதை எப்படிக் கண்டிக்க..

எல்லாம் தேவதையாய் உருக்கொண்டதால் வந்த வினை

விருந்துக்கும் உபசாரத்துக்கும் பரிகாரமாய்
இனி அவள் அரசர்களை அழைத்துவர வேண்டும்
வெடிச்சத்தங்களும், வாணவேடிக்கைகளும்,
தோரணங்களும், பந்தல்களுமென
கோட்டைகளும் இப்போது விழாக்கோலம் பூண
இம்முறை வரவேற்பு இன்னமும் பலமாகவிருக்கும்

அரசர்களை உள்நுழைய அனுமதித்த பின்
கோட்டையின் சுவர்களிலிருந்து வெளிக்கிளம்பும் பிசாசொன்று
அவளைப் பிதுக்கி வெளித்தள்ள
அதிக காலமெடுக்காதென..
அவளது தயவின்றி அரசர்களின் அருட்கடாட்சம் கிட்டாதென்பது
அவர்களுக்குத் தெரியுமென - பாவம்
அவளெப்படி அறிவாள்?

அகவயத் தெளிவு

கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்
புழுதியில் கிடந்துகொண்டு
அண்ணாந்து பார்க்கிறேன்..
நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்
இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன

இனியென்ன..
கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி
அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,
தூக்கியெறியப்படுதலை எதிர்பார்த்தபடி.
எனினும்
நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்

தேவதைகள் காத்திருப்பதில்லை எவருக்காகவுமே.



சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!

கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்?
நினைவில்லை.
கருநிறக் காளானென தெருவெங்கும்
ஆங்காங்கே முளைத்திருக்கும்
குடைகளின் விளிம்புகளிலிருந்து
வெண்பனித் துகள்களாய்..
சரம் சரமாய்..
மழைநீர் கோர்த்துத் தொங்குவதை,
தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை
கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்?
அதுவும் நினைவில்லை.

இன்றும் மழைபெய்தது.
உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து,
வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில்
காகிதப் படகு விடவென
கொப்பித்தாள்களைக் கிழித்து
அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த
அதே மழை..,
மறுபடியும் இன்று.

இப்போதெல்லாம்..,
என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை
எதிர்ப்படும் மனிதர்கள்,
தெருவில் கடந்து போகும் வாகனங்கள்,
கோவில் வாயிலில் ஒதுங்கியிருக்கும் பிச்சைக்காரர்கள்,
சிறுவர்கள், முதியவர்கள்,
வானம் வெடித்துப் பெய்யும்
பெருமழை...
என எதுவுமே

சிந்தனையின் கனத்த திரைகள்
என்னைப் பார்வையற்றவளாக்கி விட்டன.
விழிகளுக்கும் மூளைக்குமிடையே
பார்வை நரம்பின் குறுகிய வளைவொன்றினுள்
சிந்தனை சிறைப்பட்டிருந்து
என் விழிகளைக் குருடாக்கிப் போனது.
அன்றேல், யார் கண்டார்?
சிந்தனையின் பதுங்கு குழிகளுள்
விம்பங்களினின்றும் வெளிப்பட்ட மின் அதிர்வுகள்
தேங்கிக் கிடக்கின்றனவோ என்னமோ...

சிந்தனை ஒரு சாபக்கேடு

சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

சிந்தனை என் செவிப்பறையைத்
துளைத்திருந்ததெல்லாம் பழங்கதை.
வெள்ளை இயந்திரங்கள் பறித்தெடுத்த மகனைத் தேடி
தெருக்கள் வழியே ஓடித்திரிந்த
கிழவியின் ஓலம்..
கருநிற மிருகமொன்று அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..
பூட்ஸ்களின் தடதடப்பு,
உறுமல்கள், நெறுமல்கள்..
எதுவும் என்னை அசைத்துவிட முடியாது,
இன்று.
ஏனெனில்,
என் காதுகள் செவிப்புலனை இழந்து - இப்போது
நாட்களாகின்றன.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.


பேசும் திறனை எப்படி இழந்தேன்
என்பது பற்றி
நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை
மௌனித்திருக்கிறேன் - அல்லது
மௌனித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன்
என்பதற்காய்
நடந்தவையெதுவும் இல்லையென்றாகிடுமா..
அல்லது, நடக்கவே நடக்காததெதுவும்
நடந்துதான் விடுமா..
சிந்தனை என் நாவின் மீது
உறைபனியெனப் படிந்து, இறுகி
அதனைச் செயலற்றதாக்கிற்று.
இனியும், அது குறித்துப் பேச
நான் பிரியப்படவில்லை.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

பேசுதல், கேட்டல், இப்போது பார்த்தலென
அனைத்தையும் இழந்துவிட்ட பின்னும்,
தொலைதூரத்திலுள்ள
இலக்கற்ற புள்ளியொன்றை நோக்கி
முடுக்கிவிட்ட பொம்மை போல
தொடர்கிறதென் பயணம்...

ஆம்,
இப்போதும் என் கண்களுக்கு
எதுவுமே தெரிவதில்லை தான்.



எல்லாம் சரியாய் அமைதியாய்
அழகாய்த்தானிருக்கின்றன..
சுயத்தினை நோக்கிய தேடல்களும்,
உள்ளார்ந்த தொலைதல்களும்
என்றும் சுவாரசியமானவைதான்..,
தடுத்து நிறுத்தி
எதிர்க் கேள்வி கேட்க
எவரும் முன்வராத வரையிலும்.

தெருவில் தற்செயலாய்க்
கடந்து போகுமொரு சைக்கிள்,
அநிச்சையாய் எதிர்கொள்ளுமொரு
பாடசாலைச் சிறுவன்,
போதிமரம் தேவைப்படுவதில்லை...
இவை போதும்
எனக்கும்,
தூசி படர்ந்த மூலைக்குள்
மீளாத் துயில்கொள்ளும்
என் புத்தருக்கும்..

நான் வாழ விரும்புகிறேன்
அவர்கள் அனைவருக்கும் மத்தியில்,
என் சுயம்
காணாமல் போயினும்,
அடையாளம் தொலைப்பினும்..
அனைத்தையும் ஏற்றுக்கொண்டு..,
மரண பயத்தினையும் கூட..

மனிதர்களை என் நேசத்துக்குரியவர்கள்..,
வேறெதனையும் விட..

சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள்

1.

மார்பின் மீது கவிழ்ந்து கிடந்தது
ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுதி
என்னையறியாமலேயெ உறங்கிவிட்டிருந்தேன்
பிரதியின் பக்கங்களிலிருந்து நழுவிய
புலிக் கவிதையொன்று
ஆழ்கனவுகளினூடு நுழைந்து
என் முலையுறிஞ்சத் தொடங்கியது

இருண்ட தெருக்களின்
ஆளரவமற்ற வளைவுகளின் மறைப்புகளில்
எதிர்கொள்ள நேர்ந்த
சிலமனிதர்களின் நினைவும்,
பாம்பின் வாலாய்
தொங்கிக்கொண்டு கிடப்பதை
அவர்கள் காட்டிக்கொண்டு திரிவதும்
ஏனோவொரு இனம்புரியா அதிர்வுடன்
கனவினை ஒருகணம் உலுப்பலாயிற்று

பேருந்துகளின் நெரிசல்களினூடு
பிருஷ்டமுரசிய விறைத்த வால்களை
முறித்தெறிய தீராத அவாக்கொண்டு
இரட்டைப் பூட்டிட்டு
தன்னைத்தான் தாளிட்ட
என் யோனி
கவிதையின் ஸ்பரிசத்தில்
கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்
அதிசயம்தான்.

2.

dali

கொஞ்சங் கொஞ்சமாக
இல்லாமலாகிக் கொண்டிருந்தது,
மொழியினதும், எழுத்துக்களினதும்
சாத்தியப்பாடுகள் குறித்தான
எனது பிரக்ஞை.
வரிவடிவங்கள் கலைத்து
அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன
எனது மொழி பிடுங்கப்பட்டு
அந்நிய எழுத்துருவமொன்று
வலிந்து திணிக்கப்பட்டது
என் மண்டையோடு பிளந்து

'அவை எங்கள் உணர்வுகளை
மோப்பம் பிடிக்கக் கூடியவை'
கூட்ஸியின் வரிகள்
ஆறுதல் தரத் தவறின.
கனவு வளர்ந்தது,
சாத்தியப்பாடுகளை கட்டுடைத்துக்கொண்டு

இனி,
நான் பேசப்போவதில்லை
எதுவும் எழுதுதலும் இனி சாத்தியமில்லை
என்னைப் பற்றி,
என் கனவுகளைப்பற்றி
எப்படித்தான் பேசுவது
உங்கள் வாயைக்கொண்டு?

3.

புலியின் நெற்றிப்பொட்டிலிருந்து
நழுவிய ஏதோவொன்று
தொடைகளின் இடுக்கைத் தடவி உள்நுழைந்து
கருப்பையை நிறைக்க
திடுக்கிட்டு விழித்தேன்

கனவினைக் கீறிப்பிளந்து
வெளியேறிய கவிதை
பிரதிக்குள் தஞ்சமடைந்து
அப்பாவியாய் ஏறெடுத்து நோக்கிற்று
பீதியில் தோய்ந்திருந்த என் முகத்தை

ரௌத்திரம் கொண்ட
பெண்புலியின் குரல் மட்டும்
தொடர்ந்தும் காதின் மடல்களைத்
துளைத்த வண்ணம்,
'நான் சிட்டுக் குருவிகளைப்
பிரசவிக்க விரும்புகிறேன்..'

தொடைகளினிடையே இரத்தம் கசிந்தபடியிருக்க,
'சக்கரவாளக் கோட்டம்'
என் மார்பின் மீது
கவிழ்ந்திருந்தது.


*

சிதைதல்

தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் முள்ளென்புகளும்தான

நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுக்கள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..

எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்

காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை

விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.


அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள்


1.

உதடுகள் இறுகத் தாளிடப்பட்டு
ஊடறுக்க முடியா மௌனங்களுடன்
வாழ்தலின் கனம்
உயிர்தின்னத் தொடங்கியவோர் பொழுதில்
கழற்றியெறிந்த கச்சையின்
வியர்வை தோய்ந்த பெண்மையின் வாசனையை
ஆழ உள்ளிழுத்து
குலுங்கிக் குலுங்கியழுதபடி,
ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக்கொடுத்தேன்

சுவாலைவிட்டு நிலவு எரிந்து
கருகும் பிணவாடை கவிந்திருந்த இரவதனில்
ஊர் கேட்ட முதற் குரல்:
"நான் மகத்தானவள்..."
என்பதாயிருந்தது
நட்சத்திரங்களும் எதிரொலித்து
அண்டசராசரமெங்கும் நிறைந்து வழிய
காம்புகளில் துளிர்த்த
முதல் துளியின் வாசனை
பறைசாற்றிப் போகும்
நான் மகத்தானவள்..
மகத்தானவள்..

மொழியின் லாவகம் கைவந்த மறுகணம்
காலங்கள் பற்றியதான
இல்லாமலேயே போய்விட்ட பிரக்ஞைகளோடு
வெறித்த கண்கள்
தெருவோரமெங்கும் நிலைகுத்தி நிற்க,
நொடிக்கொரு திசையில்
திரைகளை விலத்தியபடி
விட்டேத்தியாய் சிறகடித்துப் பறக்கும்
என்னொரு முலை..
சமூகத்தின் அடிவயிற்றைக் கீறிப்பிளந்த
தடயங்களைச் சேகரித்தபடி
நானுமொரு பெண்ணென்ற கெக்கலிப்புடன்
பின்தொடரும் மற்றொன்று..

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..,
கழுத்தை நெரிக்கும்
'ஆம்பிளை'த்தனங்களைப் பற்றி..
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி...


2.

அனைத்தையும் களைந்தெறிந்து
கனவுகளோடு மட்டுமேயென
வாழ முற்படுவது
தேவலை போலவும்...
அவள் தந்த உடலுக்காகவும்,
நோயில் வீழ்ந்த தேசமொன்றில்
நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்தலுக்காகவும்
கண்காணா பரப்பிரம்மத்தை
சபித்துச் சபித்து
தேறுதலடைவது போலவும்...
கட்டற்று பிரவகிக்கும் வார்த்தைகளை
அதன் போக்கிற்குப் பெருக்கெடுத்தோட
அனுமதிக்க மறுத்தவோர்
தனித்த இரவதனில்
எப்படியும் நெஞ்சு வெடித்து
என்றென்றைக்குமாக இறந்துபோவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி...


இரவின் தடங்கள்

அந்தக் கணத்தின் நிசப்தம்
எதையும் உணர்த்திப் போனதாக
நினைவில்லை
இருட்டும் நானும் மட்டுமேயான தெருக்களில்
மழைச்சரங்களும் சில்லூறுகளும்
என் காலடித்தடங்களுடன்
வழித்துணையாக கூடவே
சலனங்களில்லாப் பொழுதுகளின்
பிரளயங்களைத் தூண்டியபடி

மௌனங்கள் இன்னமும்
மொழிபெயர்க்கப்படா
சாலைகளின் வளைவுகளுள்
ஏதோவொன்றிலிருந்து தோன்றிப் பின்
தொடர்கிறது
கனவுகளைக் கலைத்துப்போகும்
முகமூடி மனிதனைப்போல
இன்னுமொரு காலடியோசை

பாதங்கள் விரிந்து
முதுகுப் பரப்பெங்கும்
நிழலாய்ப் படர்வதை உணர்ந்து
திடுக்கிட்ட மனம் சில்லிட்டுப் போக
பிரபஞ்சத்தை நிறைத்தபடி
கண்ணெதிரே விரிகிறது
முன்னமொரு நாளில்
அணுவணுவாய் உணர்வுகளை
சிதைத்துப் போனவனின் முகம்

மற்றுமொரு மழைக்காலத்தில்
பீதியூட்டும் காலடியோசை
பின்தொடராத் தவிப்பில்
பதறுகின்ற மனத்தோடு
மறுபடியும் நான்

தெருக்கள் மட்டும்
நீண்டு கொண்டே போகும்
என்றென்றைக்குமாய்...


நாளைய பொழுதும் இப்படித்தான் விடியுமாமெனில்..

கனவுகள் வேண்டாமென்று சொல்லுங்கள்..!

1.

நெக்குவிட்டுருகுகிறது மனம்..,
வழிந்தோடும் உனது பிரியங்களில்.

இளவேனில் வானம்
அதிகாலை வாசம்
மனதில் சுடர்விடும்
உன்மீதான நம்பிக்கையாய்..
முளைக்குமொரு வெள்ளி
எல்லாமே இயல்பாய், முறையாய்,
அதனதன் ஒழுங்கு குலையாமல்

நீ அதிசயிக்கிறாய்..
புன்னகைக்கிறேன் நான்.

எனக்கு மட்டும்தான் தெரியும்..,
நிலவைச் சூழும்
சாம்பல் ஒளிவட்டங்கள்
இயல்பின் நிரந்தரத்துவங்களை
நிராகரிக்கக்கூடுமென்று..

ஒற்றைப்பனையின் சிருங்கார மொழி
ஒருவருக்கும் புரிவதில்லையென
ஊர்க்குருவி குறைபட்டுக் கொள்கிறது,
அணைகட்ட மண் சுமக்கா
ஊனமுற்ற அணிலிடம்

'நான் மட்டுமென்ன விதிவிலக்கா' என
வாய்க்கால் நீரின் அபஸ்வர நாதங்களையும் மீறி
தாழைமடலொன்று வினவிய
காலைப்பொழுதில்..
ஆற்றங்கரையோரத்து நாணற் புற்கள்
தலைநிமிர்வதில்லையென்ற
ஆதாம் காலத்துச் சமன்பாடுகளை
கணனித் திரைகளிலிருந்து பறித்தெடுத்து
மூளைக்குள் திணித்துக் கொள்கிறான்,
என் சின்னவன்

மனிதர்களால் மீறப்படுகின்ற
ஒவ்வொரு வாக்குறுதியும்
கருவேலங்காட்டு முட்களால்
பொத்திப் பாதுகாக்கப்படுகின்றதாம்
எனது நினைவுகளெங்கும்
முட்களே நிறைந்திருக்க,
சில்லூறுகளால் உசுப்பப்பட்டு
ஆதிவாசிக் கனவுகள் உயிர்த்தெழுமொரு பொழுதில்
விடைபெறுவேன் என் இன்மைகளோடு.


2.

இப்போதெல்லாம்...

மின்மினிப் பூச்சிகளும்
மௌனங்காக்கத் தொடங்கியதில்
வெள்ளை யானைகள்
உலாப்போன என் தோட்டங்களில்
பட்டாம்பூச்சிகளின் சிறகசைவுகள்
கரையொதுங்குவதேயில்லை

எப்படிச் சொல்வேன்,
என் கண்ணே..

நெரிசலான பேருந்துப் பயணத்தின்
யன்னலோரத்து இருக்கை போல,
ஆசுவாசமாகிப் போனது
பாம்புகளோடு பழகுதல்;
சௌகரியமாகிப் போனது
பச்சோந்தியாய் வாழுதல்.

நிழல்களும் முக்காடிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள
தேசத்தில் பிறந்தவளிடம்..
அலட்சியங்களுக்குள் ஊறிப்போய்
நாட்களைக் கடத்துபவளிடம்..
இன்னுமேன் இல்லாமற்போன
ஈரங்களை எதிர்பார்க்கிறாய்

மாமரத்துக் குயில்கள் பாடலுறுவது
எவரும் கேட்டு இரசிப்பதற்காகவல்லவே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக