வெள்ளி, 23 ஏப்ரல், 2021

 


பூத்துக் குலுங்குதையா

(வெண்பா அந்தாதி) 

எப்ப வருவீக ? ஏங்கித் தவிச்சிருக்கேன்.
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.

பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச்  சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!

வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.

விழித்தால் கனவு விலகுமென  எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?

 

படிச்சுக் கிழிக்க வேண்டாம்

 

ஏன்டாப்பா எம்மவனே 
   இப்படி நீ செஞ்சுப்புட்ட 
வேண்டாத வேலையெல்லாம் 
   வெட்டியாக பண்ணிப்புட்ட 

படிக்க வேணாமின்னு 
   படிச்சு படிச்சு சொன்னேனே 
அடிச்சு சொன்னேன்- நீ
   அப்படியும் கேக்கலியே

பெயிலாகித் தொலைச்சிருந்தா 
   பேசாமா இருந்திருப்பேன்.
பாஸாகித்  தொலச்சிட்டீயே  
   பாவி இப்ப என்ன செய்வேன் ?

கூழுக்கே வழியில்லை
   கும்பி இங்கே காயுதடா 
காலேஜில் சேத்துவிட
   காசுக்கு எங்க போவேன் ?

மூத்தவ வயசு இப்ப 
   முப்பத்தொண்ணு  ஆகுதடா 
அடுத்தவ ஆளாகி 
   அஞ்சு வருஷம் ஆச்சுதடா 

மாப்பிள்ளை வாங்கத்தான் 
   மாடாய் ஒழைக்கிறேண்டா 
நல்லவரன் தேடித்தேடி 
   நாயா அலையிறேண்டா 

ஒங்க ஆத்தா ஒடம்புக்கு 
   ஒருநூறு கோளாறு
ஒருவாயி மருந்துக்கே 
   நாளெல்லாம் தகராறு

எப்படி நான் சமாளிப்பேன்
   எதைச் சொல்லி நானழுவேன் ?
இப்ப உன்னை படிக்கவைக்க 
   எங்க போயி முட்டிக்குவேன் ?

வடிக்க அரிசியில்லை 
   வாயிக்குத் தண்ணியில்லை
படிக்க வைக்க எனக்கு 
   வழியேதும் தெரியவில்லை 

படிச்சுக் கிழிச்சு நீ 
   பாழாப் போக வேணாம்
வடிச்ச காஞ்சி தூக்கி 
   வாடா நீ வயலுக்கு. 
ஈழத்து மண்ணின் எழில்சிகரம் -யாழ் ஈன்ற தீவுகள் ஏழின் நடுவே ஆழத்து அலையெழுந்து தாலாட்டும் அழகு மண் புங்குடுதீவினிலே வேழமுகத்தான் அருள் வேரிட்ட -நல் வேளாள குலக்கொழுந்தாம் -அவள் பாளத்துத் தங்கமே பரமேஸ்வரி தாயே பண்போடு வாழ்தல் உன் மரபுவெனவே . பதிதனை இழந்தும் உன் பால்யவயதில் பண்புற வளர்த்தாய் உன் செல்விகளிரண்டை மதியொறு மருகரை மணந்திடலாக்கி மாண்புறு பேத்திகள் அறுவரை மோந்து இது மட்டும் போதும் எனக்கென்ன -இனி என்றுமே இருந்த உன் வாழ்வில் விதியதன் சதியோ விண்ணவன் கதியோ விரைந்து நீ போன காரணமறியோம் எந்தாய் மறைந்தீர் எம்மை மறந்தீர் -துயர் அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே சிந்திட துளிகளைச் சென்றீர் எங்கே -உடன் செப்புவீர் அன்னையே . செயலற்று இங்கே வெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு விரைந்து திறந்ததேன் மரணத்து வாயில் தந்தனை உயிரை தவித்திட உறவே -யாரும் தாங்கிட இயலா உமது மறைவே. வந்தவர் எல்லாம் போவது உண்மை –இது வாழ்வியல் உலகில் இயற்கைத் தன்மை சிந்தனை எமக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில் செப்பிட இயலா துயரே மோதும் உந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும் உம் நினைவே துஞ்சும் வந்தனை செய்வோம் வாழும் வரையில் –உன்னை வழி அனுப்பிடவோ வார்த்தைகளில்லை. இருபது வருடங்களாக எங்களுக்கும் அன்னையாக பேத்தியாக எம்மோடு இணைந்து வாழ்ந்து அன்பு காட்டி பாசமூட்டி நேசித்து நின்ற உங்கள் பூமுகத்தை என்று தான் மறப்போம்.எங்கள் நெஞ்சில் என்றும் வாழும் இதய தெய்வம் நீங்கள் .உங்கள் ஆத்மா இறைவனடி சேர இறைஞ்சுகின்றோம் .