திங்கள், 2 ஜூன், 2014


"இருக்கிறானா? இல்லையா?" எனும்
அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)
"ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின்
போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?
மாமனிதனின் மாதாவே! -
நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று... சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் - உன்
இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்;
அதற்கு, தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது!
'தம்பி! தம்பி!" என நானிலம் விளிக்க நின்றான் - அந்த நம்பி; யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த...
நம்பியை நம்பி; அம்மா!
அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி;
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி;
அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில்
நிறுத்தி வெப்பாக்கி;
மான உணர்வுகளை மப்பாக்கி;
தரும நெறிகளைத் தப்பாக்கி - வைத்த
காடையரை வீழ்த்த...
தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி! 'இருக்கிறானா? இல்லையா?" எனும்
அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
அம்மா! இந்த அவல நிலையில் - நீ...
சேயைப் பிரிந்த தாயானாய்;
அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி - வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை!
வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே!
நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி;
உனக்குத் தங்க இடம்தராத - எங்கள்
தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக