திங்கள், 1 நவம்பர், 2010

ஆடுகளுக்காக...


அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக
சலனமின்றி மூப்படைகிறது
சந்ததிகளின் ஆயுள்.

விடியலைப் பறைசாற்றும் நோக்கில்
ஆர்ப்பரித்த சேவல்களால்
வாழ்தலின் வேட்கை அதிகரித்து
உயிர்த்தெழுந்த போதெல்லாம்
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.

சிறை மீட்பாளர்கள்
சிந்திக்கும் அவகாசத்தில்
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.

கசாப்புக் கடைக்காரனின்
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள
பிடியளவு தழைகளையும்

ருசித்துத் தின்னும் ஆட்டின்
இறுதி நிமிட வாழ்தலின்
நிதானத்திற்கு நிகரானது
ஆதிக்குடிகளின்
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.

ஓர்மத்துடன்
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்
தலை மறுக்கும் ஆற்றலுடன்
ஆடுகள் துணியும்.

ஓர் தினம் பட்டி உடைக்கும்.
பச்சைப் பெருவெளிகள் தேடி
படையெடுக்கும்.

பின்னாக வயிறு புடைக்க மேயும்.
வெளி முழுவதும் உலவும்.
அவ்வெளியே
பின் நாளில் பட்டியாக்கப்படும்.


http://www.vaarppu.com/view/2269/

இனி நாய்கள் மட்டுமே..



கதவோரம் தாழ்வாரம்
அடுப்படிச் சாம்பல் மேடு.. என
சுருண்டு கிடந்த நாய்கள்
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன
ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்
தமக்குள்ளே தம்மையே கடித்தும்
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்
அதற்காய்...
முழுவதையும் இழந்தாயினும் புணர்வது
எனவும் போல
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்
குறிகள் விறைத்து குமையும்.
ஒன்றையே புணர..

சினைக்குள் சாத்தியம்
நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ
குரைக்கக் கூடியதாகவோ
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ
வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ
சில நாய்கள்.
நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை
விரும்புவதும் ஏற்பதுவும்
எவரும்
பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.
ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்
எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்சமாகவேனும்.. எதை வீசினாலும்
கவ்விக் கொள்ளும்.
விருந்தெனச் சண்டையிட்டு
அதையும் சகதியில் வீசும்.
பின்
வீறாப்போடு வெறுங்குடலைக் கழியும்.
கடைசியில் எச்சிலூறி
எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.
நாய்கள்.

வேட்டைப் பற்களிருந்தாலும்
விரல் நகம் நீண்டிருந்தாலும்
அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்
எலும்புகள் தானென்றில்லை..எதுகிடைத்தாலும்
நாக்கொழுகித் தின்னும்.

தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..
இவை
நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக