திங்கள், 1 நவம்பர், 2010

வாசல் > கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-10-23

வெள்ளாடுகளின் பயணம்
துவாரகன்
இவரின் பிற கவிதைகள்


வெள்ளாடுகளின் பயணம்
----------------------------------

ஆட்டுக் கட்டையை விட்டு
எல்லா வெள்ளாடுகளும்
வெளியேறி விட்டன.
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று
என் அம்மா
ஒரு போதும்
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.

இப்போ அவை
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு
ஊர் சுற்றுகின்றன.

சிதைந்துபோன கொட்டில்களில்
தூங்கி வழிவனவெல்லாம்
பறட்டைகளும் கறுப்புகளும்
கொம்பு முளைக்காத குட்டிகளும்
எனக் கூறிக்கொள்கின்றன.

தம்மைச் சுற்றிய
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்
விடுப்புப் பார்ப்பதற்கும்
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்
பங்குபோட்டுக் கொண்டு
எஜமானன் போல் வருகின்றன.

பட்டுப்பீதாம்பரமும்
ஆரவாரமும்
நிலையானது என்று
இதுவரை யாரும் சொல்லவில்லையே!

ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்
கம்பிமீது நின்றாடும் நிலையில்
எங்கள் ஆடுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக