சனி, 26 ஜூன், 2021

 


         முதுமை படர் மேனி ( பெண்ணும் நானும்)

அழகுறு குழலும் அலைமுகில் வடிவாய்
மெழு கதன் வண்ணம்  மிக நரை கொள்ள
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை
வழுகிட மெலிதாய் வாயசை வாக
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி
பொழிலுடை அலையின்  பொலிவடிவேந்த
கழலுறு மணியின் கடுநடை யோசை
முழுதென இலதாய் மெதுநடை பழக

சுழலொரு புயலின்  செறிவலி குறுகி
தழலெழ மனதை தகித்திட வைத்தாள்
முழமொரு பூவை குழலிடை சூடி
விளைவினி ஒடியும் வெறுமிடைஎன்னும்
தளதளமேனி தகையிளந் தாடும்
துளைவிழி யம்பு தொடுவலி குன்றி
சுளை பலகனியின் சுவையிவள் அதரம்
விளை வெனும் புகழும் விரயமென்றாகி

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை
அடியெடு நடையும் அருகிட விழல்போல்
துடிப்பது மடங்கித் துறுதுறு பார்வை
வெடித்திட முயலும் வெறியுணர் வோய
கடித்திடக் கனியும் கணை மதன் மலரும்
வடித்திடு மதுவாய் வந்தவள் இன்றோ
அடித்திட அரவம் அதன் கிடைபோலே
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில்

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி
துடுப்பிழந் தோடம்  திசைநேர் விடும்போல்
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம்
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப்
படுத்திடக் கனவும் பகலினில் தினவும்
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம்

வெய்யிலில் காய்ந்து விழுமழை புரவி
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி
செய்குணம் வஞ்சம் திரிந்திடமொழிந்து
கையினில் களவும் கனிமலர் பேச்சும்
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு
மெய்யிடை  ஈரம் மிகச் சுவைகண்டு
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம்
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம்


**********************

kirikasan

unread,
20 Nov 2013, 09:06:07
to santhav...@googlegroups.com
   
    அந்தநாள் வந்திடாதோ?


செஞ்சுடர் தோன்றிடக் காலையெனும் ஒரு
திருநாள் விடியாதோ - மனம்
அஞ்சிடும் மாந்தரின் வாழ்வினிலே  ஒரு
அறநாள் எழுமாமோ - விழி
கொஞ்சிடும் மாதரின் காளைகளின் சிறைக்
கூடங்கள் திறவாதோ - இனி
மிஞ்சிடும் நாட்களில் வாழ்க்கை யெனும் அந்த
மென்மலர் பூக்காதோ

பஞ்சினில் தீயிடும் பாதகரின் கரம்
பாழ்படப் போகாதோ - உயிர்
தஞ்சமென் றுன்னிடம் வந்தவரும் தலை
தப்பிட வாழாரோ - உள்
நெஞ்சமதிற் கனல் தீயெழுந்தே யவர்
நினைவது2ம் சிவக்காதோ -  மனம்
துஞ்சிடும் மாதரும் துயர றுந்தே உளம்
தென்றலென் றாகாதோ

கஞ்சியும் கூழெனக் குடித்தாலும் அவர்
கண்ணிய வாழ்வினிலே -  தினம்
பிஞ்சுடன் பூவென உயிர்வாங்கும் எமன்
போதுமென் றேகானோ -  துயில்
மஞ்சமும் இரத்தமும் சதைகளின்றி மலர்
மணந்திடப் காணாதோ - இனி
எஞ்சிய நாட்களில் இருளகன்றே  ஒரு
இளவெயில் தோன்றாதோ

சஞ்சலம் போயும்நல் வீரமெழத் தமிழ்ச்
சுதந்திர இசைபாடி - வண்ணக்
குஞ்சரங்கள் எழில் மாலைதொங்க நற்
கோலங்கள் ஆகாதோ - கொடு
நஞ்சிடை மனமெனக் கொண்டவர்கள் எம்
நற்றமிழ் அன்னைதனை - தன்
அஞ்சுடை வயதினில் கற்றதென்றே அவர்
ஆற்றலில் திருந்தாரோ

செஞ் சிவப்பாகிய வானமதில் அச்
சுந்தர சூரியனும் - ஒரு
கஞ்சமின்றி யொளி வெள்ளமிட எம்
கனவுகள் பலியாதோ
புஞ்சைநிலம் வயல் பூமியெல்லாம் -நிலை
பொன்னெழில் பூத்தாக - உனைத்
தஞ்சமென் றடைந்தோம் தாயவளே எம்  
தமிழ் நிலம்  விடியாதோ?

*********************

kirikasan

unread,
20 Nov 2013, 13:53:20
to santhav...@googlegroups.com

    நினைவே ,  நீ ஏன் இப்படி?

மனங் கொண்ட நினைவேநீ எதிர் ஆனதேன் - என்
மடிமீதில் உறவாடும் நிலை போனதேன்
கனம் கொள்ள இதயத்தில் சுவடாக்கினாய் - பின்
கனவென்றே தொலைசென்று  மறைவாகினாய்
தனமென்று பொருள்தானும் எதுவேண்டினை - அதைத்
தரவென்று நினைந்தாலும் உரு நீத்தனை
மனதோடும் உறவாடிச் சுகம் தந்தனை- இன்று
மலர்கின்ற விதம் இன்றி மறந்தோடினாய்
 
இரவென்ன பகலென்ன இனிதாகினோம் என்
இதயத்தில் எழுந்தேநீ எனைஆண்டனை
வரவென்ன நினைவோடு வழி சென்றவன் - இன்று
வரைவின்றி உளம்நொந்து விழிகாக்கிறேன்
பரவும் நல்லொரு காலை பிரிந்தோடுவோம் - நிலம்
பனிகொண்ட புல்மீது நடந்தோடுவோம்
தரவும் பல் லுரைகொண்டு வருங் கற்பனை - அதை
தரம் கொண்டு தரவே என்தமிழ் போற்றினேன்

பனிதூங்கும் மலர்மீறும் எழில் கொண்டவா - எனைப்
பார்க்காமல் மனம்தொட்டு துணை நின்றவா
இனிப் போதும் என்றாலும் உணர்வீந்தனை - இவ்
இகம்மீது ஏன் வாடும்செயல் தந்தனை
புனிதமென் றுயர்வானப் பொழுதாகியும்  - எனைப்
போகின்ற இடமெங்கும் உடன் வந்தனை
மனிதத்தின் உணர்வென்னும் தீ மூட்டியே - அவர்
மகிழ்கின்ற பொழுதேனோ  உயிர்வாங்கினாய்

குளிரென்றே அணைவாய் பின்கணம் மாறுவாய் - என்
குரலாகப் பிணைந்தோடிச் சினம்கொள்ளுவாய்
ஒளிபோன்று மதிகொண்டே புதிர்போடுவாய் - பின்
உறக்கத்தில் உயிர்தூங்க விடை கூறுவாய்
அளி யின்பம் எனவ்ந்து கவி சொல்லுவாய் - பின்
அழிஎன்று பயம்கொள்ள மருண்டோடுவாய்
புளிமாவின் கனிகாணும் சுவை தந்தபின் இப்
புவிகொள்ளும் சுதந்திரம் தனுக் கேங்கினாய்

அதிகாரம் கொண்டங்கே அரசோச்சினான் -  அங்கு
அடிமைக்கு நிகரென்று பணியாற்றுவாய்
அதி காரச் சுவையாகி உயிர் கொல்லுவாய் - பின்
அதைப்போலும் உயிர்கொள்ள அவள்பேணுவாய்
குதித்தோடிக் குணம்கொண்டு குலம்காத்திடும்  - உன்
குறைஏது தினம்மாறிக் கணம் வேறென்பாய்
புதிதென்று எதைஎண்ணிப் போய்வாழ்விலே - அந்தப்
பேய்களின் மனம்தாவிப் பலியாகினாய்?

kirikasan

unread,
23 Nov 2013, 16:21:45
to santhav...@googlegroups.com

            சேர்ந்து நில் விடிவு வரும்

மலர் தூங்கும் பனி மண்ணில் வீழும் - பூ 
மணம் ஏந்தி இளந்தென்றல் அலைந்தோடக் காணும்
புலர்கின்ற பொழுதான யாவும் - நம் 
பொன்னான தாய்மண்ணின் புதுமை என்றாகும்
சிலர்வந்து தாய்நிலம் பற்றி - எம்மைச்
செல்லென்று காட்டிடை சிறையிட்டு வைத்தால்
இலதென்று ஆகுமோ வீரம் - நாமும்
இருந்தழும்  நிலை  காண மீளுமோ தேசம்

கலை ஒன்றித் தமிழ் இன்பம் காணும் -  நற்
கனி போலும் சுவை எங்கள் தமிழீழ வாழ்வும்
உலைபொங்கும் வயல்கொண்ட நெல்லும்  - விதை
உழவர்தம் வியர்வையும் உதிர்கின்ற மண்ணும்
நிலை கொண்ட  எம் தேசம் வேண்டும் -  அதை 
நீர்வார்த்து தருமமென் றளிக்கவா நானும்
மலைபோன்று இடர் வந்தபோதும்-  நாமும்
மறுபடி கொள்வோமோ எமதன்னை நாடும்

சிலபூக்கள் குளம் தன்னில் ஆடும் - அதில்
சிந்தாமல் வண்டொன்று தேனுண்டே ஓடும்
வலைதன்னில் மீன்வந்து வீழும் -அதை
வாரிக் கரைபோட்டு விலைகூறு வோரும்
தலைசீவிப் பூச் சூட அன்னை - அவர்
தாயாம் என் பாட்டியின் கதை சொல்லும் தன்மை
நிலைகொண்ட நாம் வாழ்ந்த  மண்ணை -  இன்று
நீசர்தம் கைவிட்டு மீட்பதே வேலை


தொலை என்று வந்தாளும் பகைவன் - அவன்
துண்டுதுண்டாய் ஆக்கத்  துணைநின்ற உலகம்
மலை போலும் தமிழ் வீர மாந்தர் - இவர்
மாளென நஞ்சிட்டுக் கொன்றதோர் கோலம்
குலைகுலை யாகவே வெட்டி - அவன்
கும்மாளம் போட்டாடக் குவலயம்சுற்றித் 
தலை கீழென் றுருண்டோடும் பூமி  - நாமும்
தருமத்தைக் கேட்டிடிட எவருண்டு மீதி

மொழி ஒன்று தமிழ் எங்கள் அன்னை - இதை
மறப்பதோ ஒன்றாகு,  மதியூகம் கொண்டே
வழி கண்டு சென்றிட வாழ்வாம் -நூறு
வகையான வழிகாணில் பிரிவொன்றே மீதாம்
தெளிகின்ற மனதோடு உறுதி - அதை 
தேர்ந்து நீ சரியான திசைகண்டு சென்றால்
பழி வென்று தீர்வாகி விடியும் - நீயும்
பயமின்றி வாழ ஓர் விடியலும் தோன்றும்.



********************************

kirikasan

unread,
24 Nov 2013, 00:14:28
to santhav...@googlegroups.com
 
       நட விடியல் தோன்றும்

மலராத மலரெங்கும் உளதோ - மீண்டுமிருள்
புலராத காலைதனும் உளதோ - பூவிதழில்;
உலவாத வண்டினமெங் குண்டோ  உயிர்போக்கும்
பலகாதகர் செய்லும் சரியோ

குலையாத குழல் மாதர் இயல்போ - மறைமுகிலம்
விலகாத மதி வானில் உளதோ - நினைவழிய
புலம்பாத எவரும் இங்கே உளதோ -தமிழரிவர்
குலம்காக்க  நீதிதன்னும் வருமோ

படராத கொடி பார்த்த துண்டோ - ஒளிபடர
தொடராத நிழல் தேகம் கொளுமோ- எமைச்சூழ
இடராக வந்த பெரும்  பகையோ - இவர்வாழ
விடலாமோ எம்கதியும் இழவோ

கடலோடிச் சூழ்நிலமும் எமதே -  இதைவந்து
தொடலாமோ அந்நியனை விடவோ - மெய்கீறி
குடலாக இவன் உருவ சடமோ - நம்விழியில்
படலாமோ விடநாமும் முடமோ

அறமின்றி அநியாயம் பலமோ- அடிமையென
மறமின்றித் தமிழ் மாந்தர் கெடவோ -கொண்டகுவை
துறவென்று மனை விட்டு செலவோ- வந்தபகை
உறவென்று நிலம்கொள்ளல் தகுமோ

சுடும் தீயில் வெந்தழியும் வாழ்வைப் - புதிதாக்க
எடுஎண்ணம்  உயிராய் மண்நேசி - இன்றுவிடில்
வடுவாகும் உனது பெருவாழ்வும் -  கடமைதனைத்
தொடுவீரமொடு   விடியல் தோன்றும்

kirikasan

unread,
28 Nov 2013, 21:50:21
to santhav...@googlegroups.com

     பரிமாணம்

மாறும் உலகில் மாற்றம் ஒன்றே
மாறாதென்றே சொன்னார்
வேறும்பலவும் விதியும் மாறும்
விளைவை வாழ்வில் கண்டோம்
கூறும் பலவாய்த் தேகம் கொல்லக் 
கூடும் கூட்டம்  மாறாச்
சேறும் மிடையே நெளியும் புழுவின்
சிந்தை கொள்ளக் கண்டோம்

ஆறும் கடலும் அதிலேயோடும்
அலைகள் மாறக் காணோம்
நாறும் பூவும் நல்லோர் வாசம்
நாளும் கண்டோம் கொண்டோம்
சீறும் புலியும் சிங்கம் தவளை
சிறிதோர் சிட்டுக்குருவி
தேறும் மெலியும் திங்கள் செயலும்
திகழத் தினமும் கண்டோம்
        

ஏறும் போலும் நடைகொள் தமிழர்
இரங்கும் மாற்றம் கண்டோம்
நீறும் பூத்தே நிழலை விட்டே
.நெருப்பி லழியும் தேகம்
சாறும் புளியக், கனியாய் வாழ்வில்
சதையில் மோகம்கொண்டே
கூறும் போடும் மிருகக் கூட்டம்
கொடிதே மாறக் காணோம்

வீறும் கொண்டே வளையா நெஞ்சும்
விருந்தென் றெமனைச்சேர
தாறும் மாறும் சொரியும் குண்டின்
தாக்கம் அழியக் கண்டோம்
தூறும் மழையில் ஓடும்நதியும்
திரைக் கொள்கடலும் இந்நாள்
தோறும் ஓவென் றலறும் சத்தம்
தோன்றும் மாற்றம் காணோம்

ஆயின் உலகில் மாற்றம் ஒன்றே
மாறா தென்னும் போதில்
தாயின் அன்பும் தாரும் வாழ்வின்
தனமும் பொருளும் காணும்
நோயின் வகையும் நிற்கும் உயரம்
நீதி நேர்மை எண்ணம்
போயின் பத்தை தேடும், ஆசை
புலனும் மாறக் கண்டோம்

காயும் பழமாய்க் கனியக் கண்டோம்
காலத்தின் விஞ்ஞானம்
ஆய்வும் பயனாய் ஆக்கும் பொருளும்
அதனில் மாற்றம் கண்டோம்
தீயும் ஒளியும் போலும் அறிவில்
தெரியும் புதுமை வழியில்
ஒயும் வகையென்றில்லா கவிதை
இன்னோர் வளம்கொண்டலென்

புதுமை என்றார் பேச்சை வானில்
போகும் அலையென்றாக்கி
பதுமை போலும் நிழல்கள் ;ஆடப்
படமென் றுயிர்போற் செய்தார்
மதுமை விழிகள் கொண்டோர் ஆளும்
மாற்றம் உலகில் செய்தார்
இது மைகொண்டே எழுதும்கவிதை
இன்னோர் வகை கொண்டாலென்?

kirikasan

unread,
28 Nov 2013, 22:16:36
to santhav...@googlegroups.com
      
          நம்பிக்கை ஒளி

கொட்டுங்கள் வட்ட முரசெடுத்து வந்து
கூடிநின் றாடுங்கடி ஒரு
திட்டமிருக்குது நெஞ்சுக்குள்ளே அதை
தட்டிப் பெருக்குங்கடி
தெட்டத் தெளிவெனச்  சேதி சொல்லும் அதோ
சிட்டுக் குருவியடி அது
நட்டமரத்தின் கிளையிருந்து சொல்லும்
நல்லுரை கேளுங்கடி

பட்ட துயரெல்லாம் போய்விடவே - நல்ல
பாதை திறக்குமடி - அதில்
சட்டென தீரமும் கொண்டெழுமாம் அந்தச்
சூரியன் தோன்றுமடி - இனி
தொட்ட தெல்லாம், எழிற் பொன்னிலங்க ஒரு
தோற்றம் பிறக்குமடி - துயர்
விட்டுவிடு துன்பம் நீங்கிவிடும், அந்த
வேளை வருகுதடி

சுட்டவர்  தொட்டவர்  தோற்றுவிட எங்கும்
சோதி பெருகுமடி - உயர்
வட்டப்பரிதியின் வெம்மையிலே பனி
விட்டுக் கரையுமடி - அந்தச்
சட்டம் திகைத்திடச் சங்கதியும் ஒன்று
சுற்றிப் பெருகுமடி - கையும்
எட்டத் தொலைவெனும் ஏற்றத்திலே கொடி
என்றும் பறக்குமடி

மொட்டு மலர்வதென் றின்பமுடன்மனம்
முற்றும் திகழுமடி அது
உற்ற சுதந்திரம் கண்டதனால் அன்பு
உள்ளம் சிரிக்குமடி
பொட்டும் நிலைத்திட பெண்மணிகள் கையில்
பூகொண் டிருப்பரடி - சிறு
குட்டி குழந்தைகள் தன்மடியில் கொள்ள
கூடிக் களிப்பாரடி

தட்டி முரசொலி சங் கொலிக்கத் தமிழ்த்
தேசம் பிறக்குமடி - அதில்
கட்டுவது கைகள் என்பதல்ல உள்ளம்
காணும்நல் லன்பையடி -இனி
வெட்டுவதும் தேகக் கட்டுமல்ல விழி
வெட்டி குலவலடி - அங்கு
கொட்டிக் குவிப்பது இரத்தமல்ல தமிழ்
கொண்ட இறைமையடி

kirikasan

unread,
1 Dec 2013, 23:17:21
to santhav...@googlegroups.com



           என்ன பிழை செய்தேன்?

கண்ணிரண்டும் காண்பதென்ன காட்சிகள்தானோ
காட்சியென்றால் கற்பனையின் தோற்றங்கள்தானோ
வெண்பனியும் செங்கனலும் வேண்டுவதாமோ
வீசுமெழிற் காற்றெழுந்த விண் உளதாமோ
அண்டமெனும் அனல் பறக்கும் அகல்விரிஆழம்
அதிலுருண்டே ஒடும்வெகு அற்புதக்கோள்கள்
பிண்டமெனும் தோற்றங்களின் பிறப்புள பூமி
பிணியுழன்று தனையிழந்து பிணமெனும்நீதி

தெண்ணிலவும் தேடிவரும் மேகங்கள் கூடும்
திசையறியும்  இளம்பறவை இரையுண்ண நாடும்
மண் வளரும் சிறுமரமும் மாநதி யோட்டம்
மனதிலெழும் மகிழ்வுதரும் மாயையின் தோற்றம்
பெண்ணுடலும் பிணைசுகமும் பேறெனலாமோ
பிறந்தவரும் பாசமெழும்  பிரிவுகள் ஏனோ
எண்ணமெனும் உள்ளெரியும்  இச்சைகள் மீறும்
இறப்பினிலே  சூனியத்தின் தன்மைகள்மூடும்

கண்படவும் காதலெனும்  கனிமலர்தோட்டம்
கைதொடவும் மெய்சிலிர்க்கும் கற்பனை நாட்டம்
பண்ணிசையும் பெண்நடமும் பருவத்தின்நாடல்
பாவைகுரல் பேச்சினிலே பணிந்திடும் ஆவல்
கண்ணிமைக்க காதல்எழும் காமனின் ஆட்டம்
கடைவழி நீர் வாயமுதம் காண்பதில் மோகம்
வெண்நரையும் பொன்திரையும் விளைத்திடும்மேனி
வேடமிழந் துண்மைவரும்  விடியலின் காலம்

விண்பெருகி வீசுமனல் விளைத்தவர் கூடல்
வெள்ளையொளி வெய்யவனின் வீறெழும்சூடு
மண்ணுலகின் காந்தமெனும் மாபெரும் ஈர்ப்பு
மரணமெனில் யாக்கை கொளும் மண்ணுடன் தீயும்
கண்ணெதிரில் காற்றில்புகை கரைந்திடச் சாம்பல்
காணும்பல சாத்திரங்கள் கண்டிடும் ஞானம்
உண்மையில்லை உலகிதுவென் றுணர்வெழும்போது
ஓங்கியெழும் கேள்விகளின் உன்னத தேடல்

தண்மையுடல் அனலெரியும் தகிப்புடன் வாழ்வு
தாங்குமுடல் பிணியுழன்று தவிப்புடன் கூடல்
உண்டழியும் தேகவளம் உள் பெருமூச்சு
உணர்வுகளின் மாயவலம் உள்மன தாகம்
எண்ணமெலாம் இல்பொருளில் ஏற்படும்இச்சை
இழிவுதரும் ஏக்கமடை எழும் பெருவெள்ளம்
பெண்ணவளே விண்ணிலுறை  சக்தியென் தாயே
பிறந்ததுமேன் பொய்மையினுள் பிழை செய்ததாலோ







kirikasan

unread,
2 Dec 2013, 01:16:16
to santhav...@googlegroups.com
ஆயிர மாயிரம் அழுத விழிகளைஅரவணைக்கத் தவறிய உலகம்

(தலைப்புக்கு கவிதை)

தெளிந்தவானில் தோன்றும் திங்கள் தேயும் பின் முழுதாகும்
நெளிந்த நீரலை ஓடும் கடலில்  நெகிழும் பின் எழும் ஓங்கும்
ஒளிர்ந்து வானடி வீழ் கதிரோனும் உதயம் காணும் ஏற்றம்
விழுந்த எமதினம் எழுந்து விடாது வதைக்கும் உலகின் போக்கும்

தணிந்த வருடிய தென்றல் தானொரு தருணம் கடும் புயலாகும்
பணிந்து மலையிடை தவழும் மேகம்  பட படவென இடிமின்னும்
அணிந்து முடியொடு அரசை ஆண்டோம் அந்நியன் வந்தே  கொல்ல
துணிந்த தமிழனை தொட்டழி என்று துட்டரை போற்றிய உலகம்

வெளுத்த முகமுடன் விழிநீர் ஒழுக வாழ்வை தாவெனக் கேட்டோம்
கழுத்தில் வெட்டியும் குழிகளை மூட க் கதறித்  துடித்தோம் தேகம்
பழுத்த கனிகளும் பிஞ்சாய் காயாய் பாலர் சிறுவர் பெண்கள்
விழுத்தி வதைப்பதில் வெந்துயிர் கொல்ல வேடிக்கை  பார்க்கும் உலகம்

அழுதோம் ஆயிரம் ஆயிரமாக அலைந்தோம் கதறிக்கேட்டோம்
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம் எம்மினம் கொல்லும்வேளை
நழுவியதேன் அரவணைக்கக் காத்தோம் அணையா தணையும் என்றார்
எழுமெம் தமிழ்காண் ஒருநாள்விடியும் இயற்கை தமிழே வெல்லும்

***********************

kirikasan

unread,
2 Dec 2013, 07:40:18
to santhav...@googlegroups.com

               தமிழ் இனிக்கவில்லையே

செந்தமிழ் தேனாம் இனிக்கவில்லை - மனம்
தீயில் எரிகையிலே - நல்ல
சுந்தரமோ தமிழ் தோன்றவில்லை உளம்
சுட்டுப் பொசுங்கையிலே
சந்தத்துடன் கவி சேரவில்லை உயிர்
செத்துப் பிழைக்கையிலே -  ஒரு
சிந்தனைக்குள் விடை காணவில்லை தமிழ்
சித்தம் உறங்கிடவே

நந்தவனம் மலர் தென்றல்தொடும் இந்த
நாளில் அதுஇல்லையே -இனி
எந்தமணம் இந்த தென்றல்தரும்  உடல்
சிந்தும்குருதியிலே
அந்திவரும் .இருள் கண்டதென்ன ஒளி
ஆதவன் முன்னெழவே --அது
முந்திவிழுந் தோடிக்கண் மறையும் எங்கள்
மண்ணின் இருள் இல்லையே

சிந்துமெழில் எங்கள் நங்கையர் கொண்டபூம்
பந்தெறிந் தாடலிலே - அவர்
சந்தணவாசமும் கொண்டலையும் தென்றல்
சுற்றிப்  பரந்திடுமே
இந்தநிலைகொண்ட மங்கையரோ பகை
கொண்டவர் இம்சையினால் - நிதம்
சிந்தும் குருதியில் தோய்ந்துடலம் மண்ணில்
சீர்கெடச் சாவதென்ன       

தந்தையன்னை சொந்தங் கொண்டநிலம்  -இன்று
தங்களின் சொந்தமென்றும் - அங்கு
வந்தவர் இல்ல முடைத் தழித்து எம்மை
வீதியில் தள்ளிவிட
விந்தை உலகத்தில் வீறழிந்து- வெட்கம்
வீட்டினுள் தூங்குவதோ  -இனி
சந்தை கடைத்தெரு சத்திரந்தான் எங்கள்
சொந்தங்கள் தூங்கிடவோ

அந்திவரக் கதிர் ஆழிவிழ மணி
ஓசை விண்ணோடிஎழ -பல
சுந்தர மாதர் குழுமிவர நல்ல
சோதிகொண்டே ஒளிரும்
சந்தன மாமலர் சூடியவர் இறை
சங்கரன் கைதொழுதே -அவர்
சிந்தை குளிர்ந்திடச் சொந்தமொடு இன்பம்
சொல்லிக் களித்தெல்லாம்

நொந்துமனம் துயர் கொள்வெனக் கோவில்
நெய்விளக் கேற்றிவைத்து  - சொல்லும்
மந்திரம் மாலை மணி யொலித்தே அவர்
மாமறை யோதுகையில் 
நிந்தை புரிந்தனை என்றுவந்தே இவர்
நீளவெண் ஆடைபற்றி - புல்லர்
அந்தோ பரிகசித் தாடுகிறார் இன்னும்
ஆகட்டும் என்றிடவோ

வந்தவர் வாழவும் கொன்றொழித்தே யெங்கள்
வாய்க்குள் அரிசியிட்டு  =-இடர்
தந்தவர் கொண்ட உயிர்பறித்தும் எம்மைத்
தள்ளிக் குழியிலிட்டு 
சொந்த சுதந்திரம் வேண்டியவர் தம்மைச்
சுற்றியும் வேலியிட்டு -இவர்
மந்தை யினமென்று ஆக்கிடவும் மதி
கெட்டுக் கிடப்பதுவோ

kirikasan

unread,
3 Dec 2013, 07:49:10
to santhav...@googlegroups.com


             துக்கமில்லை ஆனந்தம்

மரணமென்னும் முடிவைநோக்கி
. மனித வாழ்வு அடையும் போது
. மனங் கலங்கி அழுதுகொள்வதேன்
கரணம்போடும் வாழ்வில் என்றும்
.  கடைசிஎன்ற முடிவும் உண்டு
.  கருதுமெண்ணம் மறந்து போவதேன்
குரலுங் கொண்டு கதறி யோங்கிக்
. குத்தி மார்பில் ஓலமிட்டும்
. கொண்ட வாழ்வைத் தெய்வம் நல்குமோ
பரவுமாசை நெஞ்சில் கொண்டு
.  பாய் படுத்த மேனி கண்டு
.  பயனுமின்றிக் குரல் கடுப்பதோ
   

வரவும் பின்னர் செலவுமென்று
.  வானெழுந்த தெய்வம் நின்று
.  வகையறிந்து செய்த வாழ்வைய்யா
தரவுந் தந்த பின்பறித்துத்
.  தரையில் போட்டும் உடலழித்து
.  தாயைத் தாரம் தம்பி தங்கையை
பரவ நெஞ்சில் பாசமென்னும்
.  பரிவுகொள்ள மாயம் செய்து
.  பிரிவு சோகம் தீபொசுக்கிட
புரவும் மேகம் தொலையும் வானில்
.  போய்ப் பறந்து விண்ணிலேகும்
.  போலும் வாழ்வை கொள்ளவிட்டவள்

கரமும் இரண்டு காலுமீந்து
.  காதல்கொண்டு வாழ்ந்து பின்னர்
.  கடைவழிக்கு உயர வாருங்கள்
துரவும் மேடுபள்ளமென்று
,  தொடரும் துன்பம் பலபடைத்து
,  தோல்வி யென்று வாழ்வைக் கண்டபின்
உரசும் தென்றல் உள்ள வானில்
,  உலவுமேகம் தொட்டுப் பின்னர்
.  உதயமாகும் ஒளியைத் தாண்டியும்
வரமுமீந்து  வழியுமாக்கி
.  வாழ்வு மென்று மொழியும்பேசி
.  வதைபட்டான நிலையில் மீட்பவள்

அரண்டு மாயை  அழகுஎன்றும்
. அவனிமீது அறிவுமற்ற
. இருளின் போதை எம்மை வாட்டவும்
பரமஞான ஏழைகண்டு
.  பரிவுகொண்டு  இன்னல்நீங்க
. பயணமாகு என்று சொன்னவள்
மரமுமாக்கி மலையுமாக்கி
.  மதியினோடு அனல்செறிந்த
.  மழையின்மேகம் மூடும் கதிரையும்
சிரமமின்றிச் செய்த சக்தி
.  சேரும் ஆன்மபந்தம் கண்டு
.  சிறந்ததென்று  சிந்துபுன்னகை
.
**********************

kirikasan

unread,
7 Dec 2013, 07:53:03
to santhav...@googlegroups.com
                 
 இது என் மன எண்ணம்

      உண்மை யழகு!

சேலைஉடுத்திய பெண்ணே வதனத்தில்
சிங்காரப் பூச்செதற்கு - நிதம்
வேலை பெரிதென நேரமழித்திடும்`
வேளைகளை விடுத்து - ஒரு
காலை மதியம்பின் மாலை என்றே உங்கள்
கண்ணிடை மையெழுதி - கருந்
தோலைவெளுத்திடப் பூசுங் களிம்புகள்
தோல்வியதன் விளைவு

தேவையில்லை இந்த தேகந்தனைச் செய்த
தெய்வம் எழில்கொடுத்தாள் - நல்ல
பாவை யிவள் உளம் பாசமெழும்வகை
பாகின் இனிமை வைத்தாள் - ஒரு
தேவதைபோல் அன்பு தீண்ட மகிழ்வுடன்
திங்கள் ஒளிக்குளிர்மை - இன்னும்
பூவைநிகர் மென்மை புன்னகையில் மது
போதையெழவும் வைத்தாள்

மின்னலெனும் விழிப் பார்வையுடனிளம்
மேனி மெழுகிலிட்டு - அவன்
என்ன பெரும் வீர சுந்தரனும் எண்ணி
ஏங்கி உருகவைக்கும் - அதி
பன்மடங்கு எழில் பாவையென் றாக்கிட
பண்புடன் காத்தல்விட்டு -இன்னும்
கன்னம் விழியிதழ் கண்டவகை பூசிக்
கொள்ளல் பெரும் அழகோ

மங்கை யெழில் பெற மாவுலகில் ஒரு
மந்திரம் தேவையில்லை - நதி
பொங்கும்விதம் எந்த நாளுங் கலகலப்
பொன்றை மனமெடுத்தே - செய்கை
எங்கும் மனம்சாந்த மென்னும் அமைதியில்
ஏற்றமுறும் இயல்பும் - வெண்
சங்கின் நிறத்தினைச் சார்ந்த குணமொடும்
சொல்லில் இனிமை கொள்ளின்

பொங்கிவழியும் நற்பேரழகு முகம்
பார்க்க ஒளியிலங்கும் .யாதும்
நன்மையும் ஆகும்நல் லோர்நினைச் சூழவும்
நாளும் அழகு வரும் -விட்டுச்
சின்னமனதுடன் சீறிச் சினந்திடும்
செய்கை நிறுத்திவிடு - என்றும்
இன்பமனதுடன் புன்னகைப்பின் எழில்
பொன்னைவிடச் சிறக்கும்

சிற்பி வடித்திட்ட கற்சிலை பாருங்கள்
தெய்வ அழகிருக்கு -  அது
பற்பல வண்ணங்கள் பூசி வைத்த தில்லை  
பார்வைக்கு கல்லமைப்பு - எனில்
அற்புத மேனி யழகுக்கலை அதன்
அங்க அழகிலுண்டு  இந்த
சொற்பதத்தை கொண்டு சிற்பமெனும் வளம்
சேர்த்திடுங்கள் வனப்பு

kirikasan

unread,
14 Dec 2013, 11:28:12
to santhav...@googlegroups.com

          புதிர் விளையாட்டு ஒன்று செய்வதில் மூன்று நாட்களாக  மிகுந்த பாடுபட்டேன்(  ஆனால் இன்பம்) செய்தும் விட்டேன் சிறிதுநேரத்தில் சரிபார்த்து தருவேன். இதுவும் கவிதையைக்கொண்டதால் சந்தவசந்ததில் இடம்பெற தடையில்லை என நினைக்கிறேன் கீழ்க்காணும் கவிதையொடு இன்னும்  இருகவிதைகளை அந்த விளையாட்டில் போட நினைத்தும் நேரம்போதவில்லை இன்னும்சிறிது நேரத்தில் வீடு மாறுகிறோம்   பாரவண்டி (லாரி) வந்துவிட்டது . புதிய வீட்டுக்கு எப்போது இண்டர்நெற் வருகிறது என்று தெரியவில்லை. அதுவரை தொடர்பு கொள்வது கஷ்டமாக இருக்கல்லாம்
அன்புடன் 
கிரிகாசன்

    ஒரு  தெரிந்த புதிர் 

ஆடுவாள் அசைவாள் ஆனந்தமாக 
ஆனாலும் அழகுபோகாள்
தேடுவாள் சிரிப்பாள் தென்றலில் மணப்பாள் 
தீந்தமிழ்ப் பாடலாவாள்
கூடுவாள் களிப்பாள் குழந்தைபோல் சேற்றில் 
கொண்டே கால் வைத்துநின்றாள்
வாடுவாள் ஒருவன் வந்தபின் சென்றால் 
வழிபார்த்து முகம் வாடுவாள்

அலைந்தவள் ஒருத்தி அசைகின்ற நளினm 
அகமென்றும் அமைதியற்றாள்
தேங்குவாள் திரிவாள் திசையென்று கொள்ளாள் 
தேடியும் ஏதும்காணாள்
ஒங்குவாள் விழுவாள் உயிர்போவதன்ன 
உறுமியே வெள்ளைமண்ணில்
தாங்கவே வீழ்ந்து தரைபுரண் டடங்கி 
தன்னகம் திரும்புவாளாம்
 
இல்லை யென்றாலும் இரவெல்லாம் வாடி 
இன்னுமோர் பெண்ணொருத்தி 
தொல்லையும் தந்து தொட்டவன் ஓடித்
தொலை சென்றபோது ஏனோ
அல்லதும் எண்ணி அனுதினம் நொந்து 
அரைமேனி ஆகிநிற்பாள்
வல்லமை கொண்டாள் வண்ணமோவட்ட 
வடிவெனும் திருமுகத்தாள்

நேரிலே வந்தாள் நெஞ்சோடு நிற்பாள் 
நல்லுயிர் காத்து நிற்பாள்
கார்காலம் தண்மை கடுவெயில் வெம்மை
காணும்தன் நிலைமாற்றுவாள்
பேரிலோ  இளையாள் பெரிதெனும் மனதால் 
பேசிடும் கதைகள்கூறி
தேர்போலும் அசைவாள் தெருவெங்கும் திரிவாள்
தேடும் நல் மணம்கொடுப்பாள்


1. தாமரை    2.அலை (கடல் அலை)  3 நிலவு   4.தென்றல் 

kirikasan

unread,
23 Dec 2013, 14:39:54
to santhav...@googlegroups.com
நாளை மீண்டும் நன்நாள் . இணையதொடர்பு வருகிறது. மீண்டும் சந்தவசந்த வானில் இந்த சிட்டுக்குருவி இசை பாடும்

kirikasan

unread,
26 Dec 2013, 01:49:23
to santhav...@googlegroups.com

      குளிர்காற்றும் கொடுங்கோலனாக

ஊதிவீசுங் கூதல்காற்றே ஒருமுறை என்னைப் பார்
.உள்ளம் நொந்தே ஓடும்போதேன் ஓசையிடுகின்றாய்
பாதி தேயும் சந்திர ரூபம் பார்த்தே மகிழ்வாயா
பாவம் என்றே பால்வெண் நிலவின் பக்கமி ரங்காயா
நீதித்தேவன் நிம்மதியாக நித்திரை கொள்கின்றான்
நீலக்கடல்மேல் காக்குந் தெய்வம் நெஞ்சம் கல்லானான்
ஆதிப் பரமன் அங்கையற்கண்ணிக்  அரைகொள் ளென வீந்தான்
யாரைக் கேட்போம் யாரும் தேடாப் பாலைவன மானோம்


சேதிசொல்லும் சங்கும் ஊதித் தென்றல் கொண்டோடி
செய்யும் விளைவும் தீதும் நன்மை சொன்னோம் கேட்டார் யார்
ஓதிவேப்பங் குழைகொண்டாடி ஓடச்சொன்னாலும்
ஏறும் எண்ணம்  இல்லாப்பேயில் இரக்கம் கொள்ளல்போல்
சோதிக் கனலாய் சூழ்ச்சிநுட்பம் சற்றே பெரிதாக 
சொல்லாப் பொய்மை சொல்லிக்  காதில் சுற்றும்பூவாக
போதித் தருவின் கீழேகண்ட புண்ணிய மாநாமம்
புன்மை பொலியப் பொழியும் உதிரப் புனலில் நீராட

நீயும்காற்றே நெஞ்சம்கொண்டு நினந்தே எம்மைப் பார்
நெற்றிவியர்வை நிலம்மீ தூற்றி நிதமும் சோறுண்டோர்
காயும் பஞ்சாய் கடுவெம்பசியில் கைகொள் நீருண்டு
சாயும் வேளை சற்றேதூங்கச் சஞ்சலம் செய்தாயேன்
சேயும் இன்றித் தாயோ நிலவைக் கண்டே விழிஊற்றிச்
சோறும் ஊட்டப் பாலகனின்றி சுற்றும் நிழல் பார்த்து
நாயும், காணா நலிவைக்கொண்டே நாளும் தூங்குங்கால்
நீயுமகுளிராம் நீசக்கரமின் நிலையில் தொடலாமோ

ஓலைக்குடிசை உரிமைசத்தம் உல்லாசச் சிறுவர்
ஓடியாடி உழுதுண்வயலில் உழைப்பின் வழிகண்டும்
வேலை அசதி விட்டேகணவன் விருப்பில் மலர்வாகி
வேளை விடியல் முன்னே எழுவாள் விளை செந்தீகண்டும்
காலைக் கதிரைக் காணும் கமலம் கனவில் நிறைகொண்டு
கையில் வேலை கடமைஎன்றே காணுமின் வாழ்வில்
காலை கட்டி காதற்பெண்டிர் காயம்  சுவைகொள்ள
காணும் காட்சி வீரத்தமிழ் இற் றைப்புறமோ அகமோ சொல்

தூண்போற் தோளும் வேளத்திமிரும் தொலைவான்அதிர்வோடு
தொட்டால் மலையும் தூளென்றாகும் தொன்மைத் தமிழ்வீரம்
’வீண் எம்மெண்ணம் வீரத் தமிழே  வெற்றிச் சங்கூதும்
வேண்டாமென்று விடியல் முன்னே  விரைந்தே பகையோடும்
மாண்பும் மறமும்  மனதில் தீரம் மங்காப் புகழ்கொண்ட
மரபுத் தமிழா மறந்தா போனாய் மதியைக் கொள்ளாது
கேண்மை என்றே கூடாப்பகையின் கூடாரத்துள்ளே
கூடிகொள்ளக் கோழையல்ல கொள்ளாய் வீரம் கொள்!

kirikasan

unread,
29 Dec 2013, 08:26:23
to santhav...@googlegroups.com

           கற்பனைப் பெண்

தீ பூத்த கண்கள் தென்றல் சுடும் வேகம்
திங்கள்முகம் தீப்பிளம்பின் துண்டம்
நீர்வார்த்த கன்னம் நின்றதென்ன சூட்டில்
நிறை செவ்வண் எரிமலையென் சீற்றம்
நேர் கொண்ட பார்வை நீட்டுமிரு ஈட்டி
நெஞ்சமதில் மூச்சென்ற சூறை
கார் தோற்ற குழலும் கன்னமிரு பக்கம்
காற்றோடு போராடும் தோற்றம்

பார்போற்றும் வண்ணம் பார்த்த மகள்கோபம்
பனிபோர்த்த அடர்காட்டின் அச்சம்
நார் நீத்த பூவோ நலிகின்ற மென்மை
நடையோதள் ளாடும்சிறு பிள்ளை
வேர் விட்ட மரமோ விதைவயல் இல்மழையோ
வெற்றுவெளி சுடுவெயிலின் வதையோ
தேர் இல்லை அசைவில் தினம்பூத்த கொடியும்
துணை நின்றமரமற்ற நிலையில்

நேர் பார்த்து நின்றேன் நிலைஇவளின் ஏது
நேர்ந்ததென அறியாமை துக்கம்
சீர்ஏற்ற வதனம் சிதையுமொரு குற்றம்
செழுமைதனைக் கொன்றதெவ னென்றேன்
போர் கூட்டு முழவம் போடுமொலி இல்லை
பூமொட்டு விரல் கொண்டு காட்டி
யாரென்று கேட்டாய் நீயன்றி எவனோ
யானென்ன செய்வதென நின்றாள்

தேர் என்று தமிழை தினம் ஊட்டி விட்டால்
திரும்பி நீ நிற்பதென்  மனிதா
கூர்கொண்ட எழுதும் கோலெங்கு வைத்தாய்
குற்றம்நீ கொள்தண்டம் என்றாள்
எர்பூட்டி உழுவோன்  இதமான காலம்
உழுது மண் கொள்ளாத காலை
சேர்க்கின்ற பாவம் சுற்றமும் கொள்ளும்
சிறுதீயும் பசிஎன்று திய்க்கும்


பேர் எண்ணிச் செய்யும் பெருவினைகள் யாவும்
பேசற்ற விதமாக மாறும்
வார்த்தோடும் மழையும் வற்றாத ஆறும்
வழிதோறும் தாகத்தை ஆற்றும்
பூர்வீக நன்மை புதிதாக்கி வைத்தேன்
பொன்னான மென்வீணை நாதம்
ஆர்க்கின்ற மணிகள் அசைவொலி சதங்கை
அத்தனையும் மண்கொள்ள வேண்டாம்

கோர் அழகினாரம் கொள் கவிதை சாரம்0
குறைவற்றே ஊற்றும் நீரோடை
மார்மீது தவழும் மகிழ்வோடு மழலை
மனங்கொள்ள உண்டெழும் கோலம்
தீர்ந்த பசியாலே சிரிக்கின்ற விழிகள்
தென்றலம் மேனிதொடத் தியங்கும்
தார்மீகம் கொள்ளு தருவதில் குறையா
தமிழ்பாடு பாடு பாடென்றாள்

kirikasan

unread,
30 Dec 2013, 23:55:57
to santhav...@googlegroups.com
முப்பரிமாணக் காட்சி கவிதையில்  வரும் எனது கவிதைகளைப் பார்வைக்குத்  தருகிறேன்

இவையென்ன?

1.
ஆடும்நடனம் மயில் அல்ல
அலையில் மிதக்கும் மீனல்ல
தேடும் வெய்யோன் முகிலல்ல
தினமும் விரியும் குடையல்ல
பாடும் புலவர் பொருளாகும்
பங்கய மென்றும் பெயர் கொள்ளும்
கூடும் அழகிற் குறைவில்லை
கொள்ளும் முதலா மிடமாகும்
 
2.
ஒடும் ஆடும் உயர்வாகும்
உடனே வீழ்ந்து தலை சாயும்
போடுங் கல்லில் பலவாகும்
பின்னால் பின்னால் பலசேரும்
வாடும்பூவைக் கொண்டோடும்
வல்லோர் கல்லைக் கீழ்வைக்கும்
ஓடும் ஓடம் உன்மேலே
உடனே வைரண் டின்மேலே

3.
காலை தினமும் வந்திடுவான்
கண்கள் தூக்கம் கலைத்திடுவான்
மாலை மதியை  பொன்போல
மினுங்கச் செய்து மனம்களிப்பான்
தோலைத் தொட்டு தீய்த்திடுவான்
தின்னும் உணவுச் செடிவளர்ப்பான்
வேலைகடமை விடிவென்பான்
வேண்டு இடமோ மூன்றென்பேன்

4.
இறக்கை கொண்டும் உயர் வானில்
எழுந்தும் பறக்கா இவன்காணீர்
சிறப்பில் கொண்டைபெரிதாகும்
செருகும் மலரோ இலதாகும்
கறுப்பும் கலையாப் பொழுதோடு
காணும் தூக்கம் கெடுப்பானை
வெறுப்பில் விலக்கமுடியாது
விட்டுகொடுப்போம் இடம்நாலு

5.
மதி என்றார் அது மதியாது
மனதில் கொண்ட மதிவேறு
விதி என்பார் அது    கிடையாது
விழுந்துமெழலாம் எனக்கூறு
சதி செய்தாரோ தேய்ந்தாலும்
சளைக்கா மீண்டும் வளர் என்றார்
அதிக மின்னும் பொற்துகளோ
அவனைச் சுழ ஐந்தாகும்

6.
எண்ணிப் பார்த்தேன் ,முடியவில்லை
எட்டித்தொட்டேன் இயலவில்லை
கண்ணைக் காட்டிச் சிமிட்டுவது
காணக் கற்பனை பெருகியது
வெண்ணைக் கட்டி நிலவோட
விருப்பங்கொண்டு சிரித்தாலும்
தண்மைக் குணமோ தருவதனால்
தங்க துகளே ஆறென்பேன்


இவற்றை நிரைப்படுத்தி வைக்கும் புதிர்கொண்டது அந்த விளையாட்டு

விடை
தாமரை, அலை (குளம்) , சூரியன், சேவல்,  நிலவு , நட்சத்திரங்கள்

சிறுவர்களுக்காக எழுதப்பட்டது

kirikasan

unread,
31 Dec 2013, 00:16:41
to santhav...@googlegroups.com


On Monday, December 30, 2013 10:55:57 PM UTC, kirikasan wrote:
முப்பரிமாணக் காட்சி கவிதையில்  வரும் எனது கவிதைகளைப் பார்வைக்குத்  தருகிறேன்



நேரமில்லை என்று அவன் சொல்ல

நேரமில்லை என்றுசொல்லி நேரிலிங்குவந்தவனே
நேரமுள்ளைப் போலிருக்க வேண்டும்
நேருமெல்லை வாழ்விலென்றும் நீயெடுத்த யாவுமந்த.
நேரமென்பதைக் கணித்துஓடும்0
நேரதல்ல நீ.ஒறுத்தல் நேரும் வா.ழ்வில் ஆனதென்ன
நேர்மை கொண்டு நாள் உரைத்த.காலில்
நேருமல்லல் தானொழிக்க நீ நகர்வதேது நன்மை
நேர்வதற்கு நான் உதவக்கூடும்


(பொழுது போகவில்லை)

போகாத பொழுதுகள் போகாவிட்டால்
பொழுதுகளில் போகத்தைக் கண்டேஇன்பம்
ஆகாத வழிகளிலே செல்லல்வேண்டாம்
அடுத்தவரை இம்சித்து ஆடல் வேண்டாம்
நோகாத மனம்கொள்ளும் பேச்சைக்கொண்டு
நூலென்றும் ஆய்வென்றும் அறிவைக் கண்டு.
பாகாக உருகிடும் பாங்கில் அன்பை
பகிர்ந்திடுவாய் பார்மகனே பண்பில் நின்று

(பிழை செய்த போது)

சின்னப்பூ பூக்கும் சிறுமந்தி மரம்தாவும்
அன்னம்  போய் ஓடை அலயூடு நீந்திவரும்
என்னப்பு என்றால் எழுமானம் தலைதூக்கும்
எதிரே நடந்தாடும் இறுமாப்பு உடல்கொள்ளும்
பின்னப்பூ குழல்மீது  பேதை தாஎன்றாலோ
பேராழி பூந்துமலை புரட்டி விடுமிளையோனே
சொன்னப்பூ கொண்டவளை சுந்த்ரனே ஏய்ப்பதென
என்னைப்போய் சிறிதாக எண்ணத்தான் ஆனாயோ

kirikasan

unread,
1 Jan 2014, 01:42:12
to santhav...@googlegroups.com

   மயிலும் குயிலும்

நீலமலை மீதிருந்து கூவுங் குயிலே இன்று
நேர்ந்த தென்ன வாடுவதேன் கூறுகுயிலே
பாலதை பொழிந்துமந்த வானிஒன் நிலவே - காணப்
பார்த்திருந்தும் ஆவதென்ன பாடு மகிழ்வே
கோலமீது கொண்டதென்ன கூறு குயிலே இன்று
கோடிசனம் ஆடிமகிழ் வாகுந்தினமே
ஆலமரம் மீதிருந்து ஆடும்கிளையே அதில்
ஆனந்தமும் கொண்டுநீயும் பாடு குயிலே

கூடுவிட்டு ஓடி வந்தேன் கொள்ளு மயிலே - எந்தன்
கூட்டமும் தவித்தடி கொல்லவரவே
ஓடு என்று கூறினராம் உண்மை மயிலே [ கையை
ஓங்கியும் அடிக்க வந்தார் உள்ள செயலே
தேடு என்று கூறுவாராம் எந்தனயலே - அந்த
தீங்கனிக்கு ஏதுதிசை உள்ளமறியேன்
நாடு என்று கூறும் மனம் கொண்டநிலையே சென்று
நாலு திசை பாட வழி இல்லை மயிலே

சூடு என்று சுட்ட வெயில் கொண்டும் குயிலே -இன்று
சொல்ல வழி இன்றி நிற்பதேது குயிலே
கோடு கிழித்துள்ளிருத்தி கண்டநிலையே - இதில்
கோணலிட்டு நீ குனிந்து வாழும் வகையேன்
காடுமுண்டு பக்கத்திலே கானக்குயிலே - அங்கு
கற்பனைச் செடிபரந்து காணுமின்பமே
வீடு விட்டு வந்தவிதி விட்ட செயலே- இந்த
வேளையில் மறந்து கீத்ம் பாடு குயிலே

தேடுமாம் விழித்து மந்த திக்கில் சிலரே - என்ன
தேவையோ பறந்தபோது தீங்கு விளைந்தே
காடுமா மலைவிழுந்த பூவென்றானதும் - இந்த
காலையில் கனவில்வந்து காணுதே நிலை
பீடுங் கொள் பிணி பரந்து போனபின்னதே - நானும்
பேசவோ பெருத்ததீயும் பின்னெரிந்ததே
கூடுடன் அன்றான வாழ்வு கொள்வ தாயின்விண்- கொண்ட
கோலமா சுதந்திரத்தைத் தேடும் வழியே !

kirikasan

unread,
1 Jan 2014, 14:31:51
to santhav...@googlegroups.com

புத்தாண்டு வாழ்த்துக்கள் போகுமோ

சூரியன் மேற்கில் உதிக்கின்றது - வண்ணச்
சோதிநிலா சுட்டு வேர்க்கின்றது
காரிருள் காலை குவிகின்றது - நிலம்
கொள்ளும் அரவிந்தம் பூக்கின்றது
ஏரியை விட்டு மீன் போகின்றது - அவை
ஏறிமரம் தாவி வீழ்கின்றது
வேரினில் நின்ற மரங்களுமோ - இன்று
வீறு நடைகொண் டசைகின்றது

வாரியடித் தலைபொங்குநதி - கடல்
விட்டு மலையேறப் போகின்றது
சேரியில் கன்றோடித் துள்ளுகுது - அது
தேடும்பசு அப்பா என்கிறது
பாரினில் மாற்றம் தெரிகின்றது - அவை
பாவங்களைக் கொண்டு சேர்க்கின்றது
தேரினில் தெய்வம் குறைகின்றது -எங்கும்
தேடியும் பஞ்சம் விளைகின்றது

போரினில் இச்சை பெருகின்றது - அது
பூமியில் நாசம் விளைக்கின்றது
பாரினைச் சூரியன் சுற்றுகுது - அதைப்
பார்த்து மனம் திக்கு திக்கென்றது
தூரிகை வண்ணம் மறக்கின்றது - அது
தீட்டியதோ கருப் பாகின்றது
பாரிய துன்பம் விளைகின்றது - அதைப்
பைந்தமிழே விலை கொள்கின்றது

வாடிய பூவிதழ் நெக்குவதும் - கண்டு
வண்டு அரண்டோடிச் செல்லுவதும்
நாடிய தென்றலும் கண்டதுவோ -அது
நாற்ற மெடுத்திடப் போகிறது
பாடியதோர் குரல் சிக்கியது - அவர்
பாடுமிசை காதில் குத்தியது
கூடியவள் நடமாடுகையில் - சிறு
கோணலில் காலும் சுளுக்கியது

கோடையில் பேய்மழை ஊற்றுகுது -அது
கூடிச் சிவப்பபெனக் காணுகுது
ஆடையற்ற விதம் வீதியிலே - பெண்கள்
அம்மண மேனி கிடக்கின்றது
கூடையில் பாவம் நிறைகின்றது இதைக்
கோவின் திறைசேரி கொள்கின்றது
பாடைகளின் தொகை கூடுவதும் - புவி
பார்த்துப் பரவச மாகின்றது

மேடையில் பூக்கள் சொரிகின்றன - அங்கு
மன்னன் நடையொலி கேட்கின்றது
ஜாடையில் பேசிய தேசங்களின் - இனம்
யந்திரங்கள் கொண்டு போடுகுது
பேடைகள் ஆடவர் பூங்கிளிகள் = கத்தப்
பேய்களின் இராச்சியம் ஓங்கியது
காடையர் கைகள் உயர்கின்றது - அதில்
காமப்பசிக் கிரை நம்மவரோ?

ஓடையிலே மலர் கூடையிலே - எழில்
கூடுமலை பொய்கைச் சோலையிலே
மேடையிலே மணிக்கோவிலிலே - நல்ல
மென்னிசை கோலம் கொள் பள்ளியிலே
சோடைப் பனைமரக் கூடலிலே - எங்கும்
செல்லு மிடமெங்கும் நாட்டினிலே
காடையர் கைத்திறன் காண்கிறது - எங்கள்
கன்னித்தமிழ் இனம் சாகிறது

போலிகள் ஆளுமுலகமிது - இதில்
போவன யாவும் தலைகீழிது
தாலிகள் மெல்ல அறுகின்றது - துயர்
தாங்கும் தமிழ்பெண்கள் காணுலகு
காலில்லா மேனி நடக்கிறது - அதைக்
காணச் சுவைத்திடும் பூமியிது
மேலிடத்துப் பெரு இராச்சியங்கள் வாழ்த்தி
மின்னஞ்சலில் சபாஷ் போட்டிடுமோ

kirikasan

unread,
2 Jan 2014, 13:48:07
to santhav...@googlegroups.com
              காதல் கனிந்ததோ (கிராமத்தில் கேட்டது)         

(ஆணும் பெண்ணும்  மாறி மாறிப் பாடுவதாக)
ஆண்:
நாற்றைக் கரமெடுத்து நட்டசையும் சின்னவளே
   நின்விரலோ  சேறளைந்து கொள்ளுகையில் - என்
   நெஞ்சினிலே நோவெழுந்து கொல்லுதடி

பெண்:
ஆற்றும் வகையறியேன் அம்புசமாய் வாழுகிறேன்
    சேற்றில் நிறுத்தியும் நான் சிரித்திருப்பேன் -இந்தச்
    சின்னவளோ சூரியனைப் பார்த்திருப்பேன்
 
காற்றில் கனத்த குழல் கட்டழகி உன்மனம்போல்
   கீற்றாய் உருண்டு பக்கம் வந்ததுபார் -அது
   கொஞ்சுமிரு கன்னங்களும் என்பொருள் பார்
ஊற்றும் நதிகரையில் ஒடும் அலைமேனிபட
    உள்ளிருந்து நாணமெழும் வேளையிலே நீ
    ஓரக்கண்ணில் பார்த்தவெட்கம் போகலையே

ஏற்றம் மிதித்திறங்கி எருதிரண்டும் ஓட்டிவர
     இளமகளே இடையினில் நீ வந்ததென்ன உன்
     எழிலிலங்கும் திமிரிலவை மருண்டதென்ன
ஊற்றில் நீர்துள்ளிவிழ ஓர்கலயம் கீழிருத்தி
    ஓடிவரும் நீர்தெளியக் கொள்கையிலே  - நீ   
    ஓசையின்றித் தாகத்தோடு நின்றதனால்

சோற்றுப் பருக்கைகிள்ளி சாதம்நெ கிழ்ந்ததெனச்
    சொல்லி வடித்திடலாம்  சின்னவளே பெண்
    சித்தம் புரிந்துகொள்ளப் பின்னல்வலை’   

மாற்று நினைந்தெதுவும் மங்கையிவள் கொள்ளவில்லை
   மாதர் நிலை வேறெனவே நீயறிவாய் - ஓர்
   மந்திரத்தில் காய்பழுக்கும் மாற்றமில்லை


போற்றி யுனை யிருத்தி பொன்னணிகள் மாலையிட்டு
   போகமெனச் செல்வம் கொழித்தாக்கிடுவேன்-  உன்
   புன்னகையில் உள்ளம் நிறைவெய்திடுவேன்
ஆற்றுக் கரைபுறத்தில்  ஆடாமல் கொக்கு நின்றால்
   காக்கவைத்தே ஓடும்கயல் குற்றமென்றோ - இக்
   கன்னியிவள் கொண்டதன்மை வஞ்சமல்ல

தோற்றேன் என் பேச்சிழந்தேன் தேவமகள் நீயறிந்தேன்
  தென்றல் தரும் இன்பநலம் கண்டிடலாம் . வாழத்
  தேரிலேறிக் கையிணைத்து சென்றிடலாம்
நேற்றுக் கருக்கலிலே நேசம் கொண்ட ஈர்கிளிகள்
  நீள்மரத்துக் கொப்பினிலே நின்றதய்யா - அவை
   நெஞ்சினிலே தீ எழவும் கொஞ்சுதய்யா

ஏற்றல் இழிந்து கெட்டு இல்லறத்தின் மென்மைதொட்டு
      ஏனோ இருட்டில்வண்ணம் கண்டிடலாம் - உன்
     ஏக்கம் அழித்து மெய்யில் அன்பிடலாம்
கூற்று நடந்திடுமா கொக்கரக்கோ கூவிடுமா
     சேற்றில்கதிர் முளைத்து வந்திடுமா இந்தச்
     சின்னவளின் வாழ்வுமொளி கண்டிடுமா
*///////////////////

kirikasan

unread,
5 Jan 2014, 10:25:28
to santhav...@googlegroups.com

       யார் இடம் கொடுத்தது?

தென்றலுக்கு ஓடச்சொல்லி யார்விதித்தது - இந்தத்
தேன்நிலாவின் பொன்னிறத்தை யார் கொடுத்தது
நின்றுவீசும் பூமணத்தில் நெஞ்சம் கொள்ளவும் -வந்து
நீலவிண்ணின் பஞ்சுமேகம் நீரை ஊற்றவும்
குன்றின்மீது நீரெழுந்து கூடு ஆழ்திரை - மேவும்
கோலமாகடல் தனில்லென் றீது சொன்னவர்
மன்றம் மாபுரத்தில் நின்று மன்னன் ஆளென - இந்த
மண்பிரித்துச் சொந்தம்கொள்ள யார் விடுத்தது

சுட்டுவாழச் செய்யுமந்தச் சூரியன்களும் - அண்டம்
தூரத்தூர விண்ணிலாட யார் வகுத்தது
கட்டிவைத்தும் ஆட்டுமந்த காந்தசக்தியும் - அந்தக்
காரணத்தி லண்டமீது நிற்கும்பூமியும்
கொட்டித்தூறும் மின்னலோடு கூடுமாமழை - கோபம்
கொண்டதாக வீசுங் காற்றும் யார் படைத்தது
குட்டிப்பூனை ஆடுந்தோகை கூவும்பட்சியும் - மென்மை
கொண்டுசெய்யக் கொல்லுங்கூட்டம் ஏன்படைத்தது

முட்டிநீர் தெறிக்கும் ஆழி  மோகனத்தையும் - இன்னும்
மேகமீ தெழுந்தது போகும் மண்ணின் பட்சிகள்
புட்டிமண்ணும் பச்சைக்காடு பூக்கள் கொள்வனம் - ந ல்ல
புல்லிருக்கும் மேடைசெய்து பூமி தந்தவள்
வெட்டி வேலியிட்டு நாடுவேந்தன் என்குலம் - இன்னும்
வீதி எல்லை வைத்த சட்டம்  என்றுகூறிடும்
துட்டமா குணங்கள்கொள்ளக் கொள்கை செய்தளோ - இந்தக்
கோதையர் வதைபடுத்துங் கோலம் செய்ததார்

சட்டென்றோர் தினத்திலிந்தச் சுற்றும்பூமியும் - தன்னில்
சற்றுக் காணும் காந்தமென்னும் சக்தியை விடப்
பட்டமும் பணம்பொருட்க ளோடு காண்பவர் - இந்தப்
பூமியும் தன்சொந்தமென்று பங்குகொள்ளினும்
விட்டதால் இப்பூமிவிட்டு விண்குழிக்குள்ளே - ஆழம்
வீழ்வதன்றி வேறுமுண்டோ வேந்தர்தானதும்
கொட்டிவிட்ட குப்பையாவர் கொள்ளுமட்டுமே -இந்தக்
கோளமாம் நற் பூமிதன்னிற் கேடு செய்வரோ

*****************

kirikasan

unread,
6 Jan 2014, 12:52:10
to santhav...@googlegroups.com

            மின்னல் பொறி

வெட்டவெளி கட்டையிலே வேகுதடா மேனிசுட்டுக்
.   கட்டிவைத்த கோட்டை தானும் கலைந்து போகவோ - நல்ல
.    கற்பனைக் கெட் டாதசுகம் கண்ட சூன்யமோ  
தொட்டெடுத்த மேனிதனும் தொல்லை எனக் கண்டதுவோ
.    வட்டவளை வானவில்லின் வண்ணம் போன்றதோ - அங்கே
.   வந்து நின்ற மேகத்துடன் வான்மறைந்ததோ

மெட்டமைத்துப் பாடிவைத்தேன் மேதினியில் காற்றெழுந்து
.  திட்டமிட்டுக்  காதில் ஒலி தேயச் செய்யுதோ - அது
.   தென்றலெனும் பேரில் திக்கும் மாறி வீசுதோ
சுட்டும் புத்தி தோன்றவில்லை சொல்லிமனம் கேட்டதில்லை
.   சட்டியை வைத்தாடுகிறேன் சாய்ந்துபோனதேன் - என்ன
.   சத்தியமோ போட்டுவிட்டால் தூள்தூளாகுமோ
 
கட்டிவைத்த பெண்ணவளும் காதல் நதி கொட்டிவிழும்
.    வட்டமலைப் பாறை தூவும்சாரலின் நிலை - அன்பு
.    வைத்த விழி குத்தியவாள் வீசினாள் இல்லை
வெட்டிக்குறை விட்ட நிலா விண்ணெழுந்து காணுதடா
.    திட்டமிட்டே ஓடும்முகில் தேடிமூடுதோ - வந்த
.     தென்றல் தொடப் பட்டகுளிர் தேகம் ஆடுதோ


பொட்டுவைத்த பூமகளிர் புன்னகைக்கு ஒத்தவளம்
.    சொட்டுமலர்த் தேனின் சுவை கொண்ட வாழ்விதோ - இன்று
.    சொப்பனத்தில் கண்டதுவாய்ச் சோர்ந்து போனதோ
மொட்டவிழும் பூமறைந்து முற்றிவிட்ட காய்வெடித்து
.    கட்டவிழக் காற்றிலோடும் பஞ்சென்றானதோ - அதை
.    கைபிடிக்கக் காற்றினோடு காலம்போனதோ

தட்டிவைத்த  பஞ்சணையும் தாங்க மனமில்லையெனில்
.    விட்டகுறை நித்திரைக்கு வேளை தோன்றுமோ - அந்த
.    வெண்ணிலவு வந்தகணம்  விடியலானதோ
நட்டமில்லை விற்றவனும் நாள்முழுக்க தந்துநின்றான்
.    சட்டெனத் தா என்றபோது  சட்டம் பார்க்கவோ - அவன்
.     சற்றுப்பொறு வென்றுசொன்னால் விட்டுப்போவனோ

முட்டி மழைபெய்கையிலே முற்றமதில் நின்றவனைத்
.     தொட்டுமின்னல் பார்ப்பதென்ன தேகம் யாவுமே - அந்த
.     சுற்றும்சுழல் சக்தியவள் தந்த மின்னலே
அட்டதிக்கு மாமலைகள் ஆழிபெரும் வானவெளி
.    விட்டதிசை  யெங்கும்நிறை விந்தையாகவே - அவள்
.    விண்நிறையக் கண்டுநின்றேன் வெள்ளை தீபமே

****************

kirikasan

unread,
9 Jan 2014, 14:25:56
to santhav...@googlegroups.com
         
                   சக்தியை நினை

நீலக்கடல் துடிக்கும் நெளிதிரைகள் அலைந்து கெடும்
காலச் சுழலினிலே காயம் உயிர் கலந்தழியும்
ஞாலத் திருமனிதர் ஞாபகங்கள்  சக்தியெனும்
கோலத்திரு’ நினைந்தால் கொள்ளுமெழில் வாழ்வன்றோ

பச்சை மரங்களிலும் பார்க்கும் மலர்ச் செடிகளிலும்
இச்சை கண்டுமணம் ஏந்திவரும் தென்றல் எழும்,
அச்சம் நிறைவெளியும் அண்டமெனும் சூனியமும்
உச்சம் கொண்டுறைவாள் எண்ணு துயர் நீக்கிடுவாள்.

சிவந்தே வான் கொதிக்கும் செங்கதிர்வான் உதயமெழும்
உவந்தே மண் சிரிக்கும் உணர்வுகளும் நிறமெடுக்கும்
இவள்தாள் பணிந்தவர்க்கு இன்பமெனும் வரங்கிடைக்கும்
தவழ்ந்தே வருந் துயரம் தாயிவளால் தொலையாதோ

மஞ்சள் நிலவொளியில் மனதிலெழும் குளுகுளுப்பால்
கொஞ்சம் மதிமயங்கும் குளிர் நிலவின் தண்மையுளம்
தஞ்சம் வந்தவரின் துன்பநிலை போக்குமெனில்
நெஞ்சில் கொள்வர்தமின் நிலையுயரச் செய்யாளோ

கருமை இரவுதிரக் கதிர் முகத்தின் தெளிவெழவும்
வருமை விழியுடையாள் வாழ்க்கை நலம் ஈந்தவளை
பெருமை  யத்திருந்து பிரபஞ்ச தோற்றமெழக்
கருவென்றா னவளைக் கரம் கூப்பு கருணை எழும்

வண்ணக் கலவைகளின் வான்வெளிகாண் சாகசங்கள்
எண்ணக் கருவாக்கி இத்தரையில் பிறவி எனும்
மண்ணைப் பிடித்துடலாய் மாயசக்தி ஏற்றியவள்
கண்ணில் ஒற்றியெடு கைகொடுப்பாள் காத்திடுவாள்


********************************

kirikasan

unread,
12 Jan 2014, 08:17:32
to santhav...@googlegroups.com
             தாயின் பெருமை

கடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது
களிகொண்டு உயர்வாகி எழுகின்றது
திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும்
தெளிவோடு மணல்மீது குளிர்தந்தது
நடங்கொண்ட அலையென்ப உயர்வாகையில் - அதன்
நளினத்தின் எழில்தன்னும் எதுகொண்டது
கடலான தாய்கொண்ட கருவல்லவா - அலைக்
கரமென்ப பெருமாழி  உருவல்லவா

உடலிங்கு புதுராகம் இசைகொண்டதோ - அது
உயிர் கொண்ட புதுவாழ்வின் வரைபல்லவா
இடமென்ப குளிர்கொண்டு மழைகண்டபோ -தென்
இடி மின்னல் கருமேக முதிர்வல்லவா
சடமென்ற சிலைநின்று நடமாடினால் - இச்
சரிதமதி சயமென்று சிரம் கொள்ளவா
கிடவென்று விதிசெய்த கொடும் வேளையில் - இலைக்
கொடு யின்பத்தமிழ் என்ற குரல்அல்லவா
 
தடுமாறி மனமென்ப அலைகின்றபோ - தெனைத்
தரமாக்கி இவள் தந்த வாழ்வல்லவா
முடமாக்கி இதுபோதும் முடிவென்றிட - இலை
முனை யென்று மகிழ்வாக்கி முழுதாக்கினாள்
அடர்வான முகிலூடு வெயில்தோன்றவும் - இவ்
அறிவான தொளிகொள்ள அறமீந்தவள்
திடம்கொண்டு தமிழ் பேசி கவிசெய்யவும் -இத்
திறம் தந்த தவள் சேரும் புகழ்யாவையும்


கடைகொண்ட நிலை யின்று முன்னேறவும் - இக்
கதியென்று களைகொள்ளக் கரம்தந்தவள்
மடையாக புதுவெள்ள மனம் தந்தவள் - என்
மனதுக்குள் பிரவாகம் உடை என்றவள்
நடைகொண்டு வழிசெல்ல நலமாக்கியும் - என்
நிலைகொண்ட குறைபோக்க நடுவந்தவள்
விடைகொண்டும் உயிர்போகும் வரைநிற்பவள் - அவ
விடை சொல்லப் புதிருக்குள் பதிலாகுவேன்

குடைதந்து மழையென்றும் வெயில்தன்னிலும் - நில்
குறையின்றி வாழென்றும் அறம்செய்தவள்
படைகொண்டு முடைசெய்யும் பகைகொண்டவன் - அங்கு
புரிகின்ற துயர்தன்னை முடிவாக்கவும்
இடைவந்த விதியாலே எமதன்பினர் - தமை
இலையென்றே உயிர்கொல்லும் இவ்வேளையில்
தடையின்றித் தமிழ்பேசும் இனம் காக்கவும் - எம்
தமிழ்ஈழ உயர்வுக்கும் வரம்வேண்டினேன்

kirikasan

unread,
13 Jan 2014, 10:41:38
to santhav...@googlegroups.com
முடிவில்லாக்கவிதை (மீண்டும் ஆரம்பத்திகு வரும்)

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டே இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன் - பல
பட்டுவண்ண இதழ் பூமலர்வில் சிந்தும்
பொன்னிறத் தேனமுதைக் - கொண்டு
சித்தமதில் வருந் தீந்தமிழின் கவி
செய்து தினம் கொடுத்தேன்

சுற்றும் புவியிடைச்  சூழலிலும் அன்பு
தொட்டுக் கரமெடுத்தேன் - அதில்
மற்றும் மாலைவீசு மாருத மாயின்ப
மோனை எதுகை வைத்தேன் - நல்ல
சொற்பதமா யெழில் சேர்த்து மகிழ்வென்னும்
சோதிஒளி கொள்ளவும் - எனைச்
சற்றுமெதிர் கொள்ளா சக்தி தந்த உயிர்
சாரமிடையில் விட்டே

பற்றி எறிந்தன வீழ்மலர்கள் தனைப்
பூவன தென்றல் மழை - துளி
எற்றும் விதங் கொண்டும் என்னில்தெளிக்க.,நல்
இன்பந்தரும் சுவையில் - எனைச்
சுற்றிமலர்த் தருகொப்புலுக்கி அதை
தோளிடை வாகையென - ஏது
கொற்றவனோ இவன்மேலிறைக்கும் தென்றல்
கோலத்தினை ரசிக்கப்

புற்றரையிற் பனியோடியெழ அதைப்
புல்நுனி தான் திரட்டும் - வகை
நெற்றியடி யினில் வேர்வையெழ நங்கை .
நேர்விழி வேலெறிய பட்டுக்
குற்றமி ழைத்திடா கோமகனின் மனங்
கொண்டிடக் காயமிடும் - அந்த
வெற்றியின் அற்புதம் வேட்கை கொளுமவள்
வீறெழும் புத்துணர்வில்
 
கத்தும்குருவிகள் காகம் கிளியிசை
கானக் கரும்குயிலின் - பல
சத்தமிட்டேசொல்லும் சங்கதியில் மனம்
சார்ந்தே இசைபடிக்க
முத்தமிடும் மேகம் வானடியை அதோ
முன்னடிவான் கிழக்கில் - விடும்
ரத்தமெனச் சிவந்துள்ள முகிலிடை
ரத்தின பொற்கலயம்

வட்டப்பரிதியும்  நித்தமெழும் அண்ட
வண்ணக் குழம்புகளின் - வகை
இட்ட எழில்மேவு வான்பரப்பில் வெகு
எட்டமிருக்கும் சக்தி - அவள்
தொட்டு மனதினில் கொட்டியதை இவன்
சொல்லிக் கவிதையிட - எழிற்
பட்டு மலர்களில் பொற்கதிரோன் சுடும்
புத்தொளிச் செங்கதிரால்

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டும் இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன்
....................................
...................................
(மீண்டும் முதலிலிருந்து தொடர்கிறது)

kirikasan

unread,
16 Jan 2014, 02:59:11
to santhav...@googlegroups.com

              இது ஏன்:?

மானாட மகிழ்வோடு மலராட மணிதீபம்
மாலையிளங் காற்றிலாட
வானோடு பொலிகின்ற  வின்மீன்கள் நடமாட
வெண்ணிலவு வீசியோட
மீனோடி வளர்கங்கை முப்புரங்கள் எரித்தவனின்
முடியோடு ஓடிவீழ
தீனோடிக் கொரித்தசிறு அணிலோடி திகைத்தபின்
திரும்பவந்த வழியிலோட

ஏனோடி மனமும் துயர் இழையோடி வருத்துவதேன்
இல்லையென் றோடவிட்டே
தானோடி மறைவதின்றித் தரையோடக் காலுமுண்டோ
தடையோடிவிதிக்கலாமோ
நானோடிச் செல்வதெ.ங்கு நடையோட முடியாது
நலமோடிச் சென்றதன்றே
ஏனோடி இழிவுசொல்லி இடையோடி மனம் வருந்தி
இருப்பதோ இதயம்வாடி

தீயாடி வரும்போது தெரியாது ஓடிமறை
திறமுண்டோ உயிருமோடி
வாயோடிக் கூறிடினும் வந்தசொல்லை நான்தேடி
வணங்கினேன் கோடிகோடி
பூவாடி விழமுன்பு போயோடிக் கரம்கொண்டு
பூசிப்ப தாரையோடி
நீபேடிஎன்றுமெனை நீரோடும் விழிசெய்து
நிற்பதில் என்னநீதி

சேயோடி விளையாடத் திங்கள் குடத்தண்ணீரில்.
தினம் வீழ்த்தக் கண்டுமோடி
தாயோடி அமுதூட்டத்  தமிழோடிஉணர்வூட்ட
தரையோடி வாழ்ந்த வாழ்வு
பாரோடிச் சுழலுதெனப் பலபேரும் சொலஓடி
பலதிசையும் பார்த்துமோடி
வேரோடிக் கிடந்தகுலம் விதையாக விலைபேசி
விற்கவோ என்றுவாடி

உணர்வோடித்  தலைசாய்ந்து முளமோடி மனம்காய்ந்தும்
உருவோடி இழிமை கொண்டு
தணலோடித் தீபற்றத் தமிழோடி நாபற்ற
தவிப்பது கண்டும் ஓடி
மணலோடு பிறந்தேனும் மண்மீது வளர்ந்தேனும்
மண்ணோடு மண்ணாகிடும்
கணமோடி வரும்நாளும் கனிவான விசைகொள்ளக்
காணுவதில் வேற்றுமை ஏன்?

kirikasan

unread,
18 Jan 2014, 09:53:51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக