சனி, 26 ஜூன், 2021

ஐ நா முன்றலில் நடந்த சம்பவம் கருதி

 உன்னில் இட்ட தீ  (ஈழக் கவிதை)



இட்டதீ எரித்ததுவே ஏழைவர்க்கம்
இன்னுமா தீ கொண்டு எரித்தல் வேண்டும்
சுட்டதெது தாய்மண்ணில் செந்தமிழ் தேகம்
சொல்லரிய மானிடர்தம் மெய்கொள் தீயும்
பட்ட விதம் போதாதென் றெம்மைநாமே
பாரென்று எரித்துவிடில் எதிரிஎண்ணம்
விட்டதனைத் தொடர்வதாய் விளங்குமன்றோ
வீணாகத் தீயிலே எரியவேண்டாம்

கத்தவும் கேட்கவும் கைகள்கூட்டிக்
காய்ந்த மனப் பாறையிலே இரக்கநீரும்
சுத்தமென ஓடவழி செய்தே எங்கள்
சொல்லரிய சுதந்திரம் காணல்வேண்டும்
உத்தமரே வாருங்கள் உயிர்கள் வேண்டும்
ஒன்றல்லப் பலராக எரிந்தபோதும்
சத்தியமோ விழித்திடா தூங்கும் கண்கள்,
சத்துரு தான் மட்டுமே நகைத்து நிற்பான்

வித்தைகளைப் புரிந்திடவே வேகம்வேண்டும்
விதவிதமாய் நம்முயற்சி விளைச்சல் கூட்டிப்
பத்துடனே பலவழியும் முயன்றக் காலை
பங்காளிச் சண்டையெனப் பலகூறாக்கி
மத்தியிலே தலைமையிலா மாக்கள் போலும்
மனவெறுப்பு சண்டை என மாறிடாமல்
புத்திதனை விதவிதமாய் பாவித்தன்பில்
புதியதொரு விடுதலையின் பாதை காண்பீர்

நித்தம் மலர் பூவெனவே நிமிர்ந்து நில்லாய்
நீ வாழத் தந்த உடல் நின்னது மல்ல
செத்திடவும் உன்தேகம்  உனதென்றில்லை
சக்திஎனும் தீ பற்றக் காலம் உண்டு
புத்தொளியாய் கண்டவழி பயனைத்தாரும்
புதுவீரம் பொலிந்ததெனப் பலரும் கூடி
மத்தியிலே ஒருதலைவன் மட்டும்கொண்டு
மாணிக்க தீவினிலே மண்ணை மீட்போம்

சித்தமதும் கலங்கியதோ செல்வர் பூமி
சீரியதோர் வழிகண்டு நம்பால் அன்பை
புத்திகொண்டே என்னபடு பாடும்பட்டே
பொன் நாட்டை மூதாதைஇனமும் ஆண்ட
சத்தியத்தின் கதைஎண்ணிச் சரிந்திடாது
தன்வழியில் வீறுநடைகொள்ளல் வேண்டும்
நித்தியமாய் வாழவழி தேடும்போது
நிலைக்காமல் போவதிலே நன்மை உண்டோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக