வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற திங்கள்
   மறுநாளி லிலையாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலரும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலும்
  கதியின்றித் தொலையோடலாம்
எளியோரி னுயிரோடு விளையாடுமிவனை
    எதுவந்து தனதென்குமோ
பெரிதாகிப் பிளவாகி நிலமுள்ளே கொண்டு
  பிரியாயென் மகனென்னுமோ  
தெரியாத இரவோடு எழுமாழி சென்று
  திகழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீயின்
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதொன்று மில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ

ஒருநாளில் கனவோடு  உறவாடும் எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளியில்
   தேயாமல்  நிலவோடுமோ
அருகாமை கொடியொன்று அலைந்தாடி யின்பம்
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே யென்று
  புதிதா யோர்வழி காண்பமோ
கருகாதோ அருகாதோ கறை கொண்டநாட்கள்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் ஊடே
    விளைகின்ற ஒலி பொங்குமோ
உருமாறி கருமாறி உலகத்தில்  ஏங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயத் தலைவி
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக