வெள்ளி, 11 அக்டோபர், 2013

 திசைமாறுமா? 1 பகுதி
(ஒரு வீர தேசத்தின் கதை)
1.  நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து  நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்

ஆருயிராம் அன்பர்தமை ஆழியிடை கவரும்
அழகுஅலை கடல்மகளின் எழில்விழியென்றெண்ணி
பாருறங்கும் போதிலிதை பார்த்திலோ நின்றார்
பாய்மரத்தைக் காற்றலைக்கும் பாடெனநாம் ஆக
சேருருளும் சிற்றலைகள் சிந்துநகை யோசை
சில்சிலென்று மோதியெழும் சிறுதுளியின் கொஞ்சல்
நாருதிர்ந்த பூவெனவே நள்ளிரவின் திங்கள்
நடைபயிலும் அலைமிதக்கும் நளினஒளிப் பூக்கள்
தூரஎழும் அலை யணைந்து தொட்டிலென ஆட்ட
துள்ளுகயல் படகருகில் துடித்த விழிபோலும்
நீரலைகள் நீலவண்ணச் சேலையெனக் காணும்
நெஞ்சிலிளங் காற்றணைந்து நேசமொழிபேசும்
பேரரிய இன்பமதைப் பெற்றனரோ என்றே
பெண்ணிவளின் நோவறியாப் பின்னிரவில் நின்றார்
ஊரறியும் இவள்நிலைமை உளமறியா தென்ன?
உன்செயலே என்றுவிழி யொத்த கயல் தூக்கி
நீரெடுத்து தீயிடையில் நிறுத்தியதில் இட்டு
நெஞ்சமதில் வஞ்சமதன் நிலையழித்த மாதர்
சீரெழுந்த உணவுடனே சிந்தை கொளும் அன்பை
சேர்த்தெடுத்தும் உண்ண இடும் செந்தமிழர் பாவை
யாரெடுத்துப் போட்டவிதி அத்தனையும் மாற்றம்
யாழிசைத்த பூமியிலே வாளெடுக்க வைத்தார்
வேரெடுத்த பகைவளர வெறுப்பெடுத்து நாளும்
விளைநிலத்தில் பயிர் வளர்க்க வெட்டியழிப் போராய்
பாரெடுத்த பகையுணர்வில் பாவியிவர் நேசம்
பறிகொடுத்த சுதந்திரத்தின் பயன்விளைவு நாசம்
நேரெதிராய் வாழ்வுமுறை நிர்க்கதியென் றாக்கி
நிலைமையதிற் சீரழிவும் நேர்மைவழி மாற்றி
போரெனவே இவருடலம் பூமிகடல் உண்ண
போனநிலை ஆழியலை பார்த்தழுமோ ஓடி
கோரமிட்ட கீழ்மையினைக் கொள்ளமனங் குமுறி
கோவெனவே ஓலமிட்டுக் கொள்ளுங்கடல் இதுவோ!
 2. ஊரின் புறத்தே!
ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்
வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர் 
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்
நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின்  திருமகன் நொந்து
தெருவினில்  அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ
கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை  கடலாய்
தோன்றவும் அருள்வாயோ3,  உலகில் எங்கோ ஒரு ரகசிய அறை

வட்டமிட்டோர் ஓரு மேசையை சுற்றியும்
வந்திருந்தோர் பலவண்ணம் - அதில்
கட்டியுமாள்திடக் கண்களில் தீ பற்றிக்
காணுதே ஏனிந்தக் கோபம் - இதை
விட்டுவிட்டால் என்ன வாகிடும் என்றவர்
விந்தை கலங்கிய போது - அந்தக்
கட்டமைப்பில் கைகள் விட்டு நழுவிடக்
காணுமுலகென்ற தாபம்
***
எத்தனையோ முறை எண்ணில் பிசகற்ற
எத்துணை ஆற்றல்கள் தானும் - இனி
புத்தியினால் பலவெற்றிகள் ஈட்டிடப்
போய்விடு மெங்களின் பேரும்
சத்தியமும் காத்து சாமிகளாய்ப் பெரும்
சித்திவிளைத்திடுங் காலம் - இங்கு
நித்திரை கொண்டிடில் நேருவது மெங்கள்
நெற்றியில் இட்டவர் நாமம்
***
வெட்டி ஒழிக்கட்டும் பூங்கொடிகளங்கு
வேரைஅறுத்திடவேண்டும் - அதில்
தொட்டவுடன் மனம் தீயெரிந் தாகட்டும்
தூவிக் கொட்ட நஞ்சுதானும்
பட்ட வகைகளில் பால்மரம் தானென்ன
பிஞ்சு கனி இலையாவும் - இனி
விட்டதில்லை இந்த வேளை எரியட்டும்
பொத்திடுவோம் விழிநாமும்
***
துட்டரும் தீயரும் பொங்கிஎழுந்தனர்
தேசமொன்றின் எல்லைமீது -  அங்கு
கெட்டது நீதியும் காக்கும் அறமதும்
காகிதமேல் எழுத்தாக - பலம்
கட்டினை மீறித் தலையெழுதென்றிட
காட்சிகள் மாறும் திருப்பம் -அங்கு
தொட்டவர் கையிடை மைபடவேஇல்லை
தோன்றியதோ கருங்கோலம்
***
தேவர்கடைந்த அமுதினிலே யன்று
தோன்றிய நஞ்சினைப் போலே - இன்று
யாவரும் கொண்ட மனங்கள் கடைந்திட
ஆகிய நஞ்சென்னும் தோற்றம்
ஏவல் விளைத்திட என்ன நடக்கினும்
ஏதுமோர் பேச்சறியாது - எவர்
தூவினும் நஞ்சினை தோல்வி முடிவென
தோற்றம் இருந்திட வேண்டும்
 
***********
 4.   தேசத்தில்  ஒருபக்கம்
 கட்டுமரம் ஏறியதில் சுற்றி ஓடுவோம் = வீசும்
காற்றினிலே பாய்விரித்துக் கப்பல் ஓட்டுவோம்
எட்டியுயர்ந் தோங்கும் அலைமீது ஏறுவோம் - அது
ஏறிவிழும்போது விண்ணில் மாறித்தாவு வோம்
சுட்டவெயில் போனபின்னே தூர ஓடிடும்  - முகில்
செந்தமிழ்க்  குலத்தின்வீரம் தூய்மை எண்ணியே
சட்டெனத்தன் மெய்சிவந்து சஞ்சலத்துடன் - மேற்கு
சேர்ந்த வானத்தோடு சென்று சாய்ந்துகொள்ளினும்
கட்டிபோட்டு தீமைசெய்யும் காதகர்களின் - எண்ணம்
காற்றிலேபதர் பறக்கும் வண்ணமாக்குவோம்
சுட்டதும்நல் பொன்சிவக்கும் எங்கள்பாதையில் - உண்மை
சுட்டதாயின் கைகள் கூடிக்காணும் மெய்மையும்
எட்டநீர் குதித்துஓட எங்கள் தாகமும் - அது
இங்கு வாருமென்னும் எண்ணம் விட்டுஏகுவோம்
தொட்ட நீரும்மொண்டு வாயில் தாகம்நீக்கினும் - உள்ள
மட்டும்காண் சுதந்திரதை மேனி கோள்ளுவோம்
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக