செவ்வாய், 20 நவம்பர், 2012


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்
ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகவரும் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே
காலைப் பறவைகள் கோல இசையிட்டு
 காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
 உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
 வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
  கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக